அக்ஷய திரிதியை.. ஜுவல்லரிகளில் கூட்டம் குறைந்தது, ஆன்லைனில் ஆர்டர் அள்ளுது! ஏன் தெரியுமா?
சென்னை: தங்கம் வாங்க உகந்த தினமாக கருதப்படும் அக்ஷய திரிதியை தினமான இன்று, ஜூவல்லரி ஷோரூம்களில் பெரிய கூட்டம் இல்லை. அதேநேரம், ஆன்லைனில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
"கடந்த வருட அக்ஷய திரிதியை தினத்தை ஒப்பிட்டால் தங்க நகைகள் விற்பனை இன்று, 6 மடங்கு உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை வைத்து பார்த்தால் 100 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளோம்" என்கிறார் அமேசான் ஆன்லைன் விற்பனை நிறுவன பேஷன் பிரிவு தலைவர் மாயங்க் ஷிவம்.
22 காரட் ஜுவல்லரிகளுக்குதான் அதிக டிமாண்ட் உள்ளதாம். விற்பனையாவதில் அதிகம், தங்க நாணயங்கள் மற்றும் நெக்லெஸ்கள் என்று அவர் கூறியுள்ளார்.
ஆன்லைனில் அள்ளுது
ப்ளூஸ்டோன்.காம் என்ற ஆன்லைன் நகை விற்பனை நிறுவனமும், இவ்வருடம் தங்களின் விற்பனை சுமார் ஆறு மடங்கு உயர்ந்துள்ளதாக கூறியுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
தங்கம் விலை
அதேநேரம், ஜுவல்லரிக்கு சென்று நகை வாங்குவோர் எண்ணிக்கை கடந்த வருடத்தை ஒப்பிட்டால் இந்த வருடம் குறைந்துள்ளதாம். தங்கத்தின் விலை இந்த ஆண்டு மிகவும் அதிகரித்துள்ளது இதற்கு ஒரு காரணம்.
காரணம் இதுதான்
ஆன்லைனில் வாங்கும்போது, விலையை கருத்தில் கொண்டு சாஸ்திரத்திற்காக மட்டும் சிறு நகை ஒன்றை வாங்கிவிடலாம். ஜுவல்லரிக்கு நேரில் வீட்டு பெண்களை அழைத்து சென்றால் அதிக நகைகளை வாங்கிவிடுவார்கள் என்ற ஆண்களின் எச்சரிக்கை உணர்வு இதற்கு காரணம் என்கிறார் சென்னையின் முன்னணி நகைக்கடை அதிபர் ஒருவர்.
அதிபர்கள் ஆதங்கம்
ஆன்லைனில் விற்பனை அதிகரித்துள்ளதும், தங்கத்தின் விலையேற்றமும், இவ்வாண்டு ஜுவல்லரி சென்று நகை வாங்குவோர் எண்ணிக்கையை குறைத்துள்ளது என்கிறார்கள் நகைக்கடை அதிபர்கள்.