ஆகஸ்ட் 15-ந் தேதி மேட்டூர் அணை திறப்பு: தமிழக முதல்வர் ஜெ. அறிவிப்பு
சென்னை: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் 15-ந் தேதி திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி திறக்கப்படும். ஆனால் காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகா திறந்துவிட மறுத்ததால் நடப்பாண்டில் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் கர்நாடகாவில் தொடங்கிய பருவமழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகள் நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து பெருமளவில் தண்ணீர் திறந்துவிடப்படுவதால், தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இன்று விதி 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, மேட்டூர் அணை சம்பா சாகுபடிக்காக வரும் 15-ந் தேதிக்காக திறக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும் அணையில் தற்போது நீர் மட்டம் 93.24 அடி தண்ணீர் உள்ளதால் அணை திறக்கப்படுகிறது. கர்நாடகா அணைகள் நிரம்பி இருப்பதால் சம்பா சாகுபடிக்கான நீர் கிடைக்கும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.