அரவக்குறிச்சியில் மீண்டும் செந்தில் பாலாஜிக்கு சீட்... அரண்டு போன எதிர் கோஷ்டி
கரூர்: அரவக்குறிச்சி தொகுதிக்கு வேட்பாளராக செந்தில்பாலாஜி அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடிக்காத குறையாக கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் செந்தில் பாலாஜியின் எதிர்முகாமில் அதிர்ச்சி பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது மிகப்பிரபலமான அமைச்சர்களில் முக்கியமானவர் செந்தில்பாலாஜி. இளம் வயதில் அதாவது 36வது அமைச்சரான இவர்
கரூரை அடுத்த ராமேஸ்வரப்பட்டி என்னும் குக்கிராமத்தை சேர்ந்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் ஜெயலலிதா மீது உள்ள அதீத விசுவாசத்தால் படிப்படியாக அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராகும் அளவிற்கு முன்னேறினார்.
கரூரில் திடீர் வளர்ச்சியடைந்து மாவட்ட செயலாளர், அமைச்சராக வலம் வந்தவர் செந்தில் பாலாஜி. ஜூனியரான இவரது வளர்ச்சி சீனியர்களுக்கு பிடிக்கவில்லை. காரணம் இவர் சீனியர்களை மதிக்காததுதான் என்று கூறப்பட்டது.

இறங்குமுகம்
ஜெயலலிதாவுக்காக அங்கப்பிரதட்சணமும் செய்தார். இப்படி ஏறு முகத்தோடு இருந்த செந்தில் பாலாஜிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் சாதிக் உருவத்தில் வந்தது தலைவலி. போயஸ்தோட்டத்தில் செல்லப்பிள்ளையாக வலம் வந்த செந்தில் பாலாஜி திடீரென டம்மியாக்கப்பட்டார். எதிர் கோஷ்டியினர் தொடர்ந்து அடித்த அடியில் வீழ்ந்தே போனார்.

தம்பித்துரை ஆதிக்கம்
மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட செந்தில்பாலாஜியை, ஓரம்கட்டினார் சீனியர் தம்பித்துரை. லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியான தம்பிதுரை நாடாளுமன்ற துணைசபாநாயகர் ஆனார். இந்த பதவிக்கு வந்தபின்னர், கரூர் மாவட்ட அதிமுகவை அவர் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்.

அரவக்குறிச்சி
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது கரூர் தொகுதியில் வெற்றிபெற்ற செந்தில்பாலாஜிக்கு, இந்த தொகுதி கிடைக்கவில்லை. மாறாக அவருக்கு அரவக்குறிச்சி ஒதுக்கப்பட்டது. கரூர் தொகுதியில்தான் போட்டியிடப்போகிறோம் என எண்ணியிருந்த செந்தில் பாலாஜிக்கு பக்கத்து தொகுதியான அரவக்குறிச்சிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதால் அங்கு பலம் வாய்ந்த எதிர்கட்சி வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியுடன் போட்டியிட வேண்டியிருந்ததால் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

தேர்தல் ரத்து
பணப்பட்டுவாடா புகாரால் அரவக்குறிச்சி தேர்தல் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து செந்தில்பாலாஜியை கட்சியில் இருந்து முழுவதும் ஓரம்கட்டினர். தம்பித்துரை. கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தனது ஆதரவாளரான விஜயபாஸ்கருக்கு, செந்தில்பாலாஜி வகித்த அதே போக்குவரத்து துறையை பெற்றுதந்தார் தம்பிதுரை.

மோசடி புகார்கள்
போக்குவரத்து துறையில் பணி நியமனங்கள் தொடர்பாக 60 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கூறி சிவங்கையை சேர்ந்த நபர் ஒருவர் வழக்கு தொடுத்ததால் மேலும் சிக்கலாகி போனது செந்தில் பாலாஜியின் நிலைமை. கடந்த மாதம் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பும் வெளியாகி அதில் செந்தில் பாலாஜி குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டதால் தலைமையின் கவனம் மீண்டும் செந்தில் பாலாஜியின் பக்கம் திரும்பியது.

எதிர்முகாம் தீவிரம்
இந்நிலையில் கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது அரவக்குறிச்சியில் போட்டியிட்ட செந்தில்நாதனை மீண்டும் வேட்பாளராக்க தம்பிதுரை கோஷ்டி தீவிர முயற்சியில் இறங்கியது. அவரும் கட்சி நிகழ்ச்சிகளில் முன்னிலைப்படுத்தபட்டுவந்தார். இந்நிலையில் மீண்டும் வேட்பாளராக செந்தில் பாலாஜியையே அதிமுக அறிவித்துள்ளது. இதனால் அவரது எதிர்கோஷ்டியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சொல்லியடித்த செந்தில் பாலாஜி
அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜியை மீண்டும் வேட்பாளராக அறிவித்துவிடக் கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு அவரது எதிரணி வேலை பார்த்தது. அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜிக்கு வாய்ப்புக் கிடைப்பது சிரமம். அப்படியே கிடைத்தாலும் ஜெயிப்பது அதைவிட சிரமம் என்று சொல்ல ஆரம்பித்தனர். ஆனால் எதிர்பாராம விதமாக செந்தில் பாலாஜிக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சசிகலா ஆதரவு
கடந்த ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூரில் நடைபெற்ற விவேக் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட செந்தில் பாலாஜி, சசிகலாவிடமும், மன்னார்குடி சொந்தங்களிடமும் தன்னிலை விளக்கம் அளித்தாராம். இதன்காரணமாகவே முன்பு அறிவித்த வேட்பாளரையே மாற்றாமல் அறிவித்துள்ளார் சசிகலா என்கின்றனர்.

செந்தில்பாலாஜி வளர்ச்சி
திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்த செந்தில் பாலாஜியை கரூர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளராக தலைமை நியமித்தது. தொடர்ந்து கரூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளராகவும் நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, 2006ஆம் ஆண்டு முதன்முறையாக கரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து எம்எல்ஏவானார்.
2007ஆம் ஆண்டில் கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளராகவும் கரூர் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சரானார்.

வெற்றி பெறுவாரா?
2015ஆம் ஆண்டுவரை போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த இவருக்கு, மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை அதிமுக தலைமை வழங்கி இருக்கிறது. எதிர்ககோஷ்டியினர் அடி அடியென அடித்தும், முட்டி மோதி அடித்து பிடித்து மீண்டும் அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சிகளை வெல்வதை விட தனது கட்சியில் உள்ள எதிர் அணியினரை வென்று வெற்றி பெறுவாரா செந்தில் பாலாஜி?












Click it and Unblock the Notifications