ஓபிஎஸ் உள்பட 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கு... அக்.27க்கு ஒத்திவைப்பு
துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 12 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரும் வழக்கு குறித்த விசாரணை அக்டோபர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை: துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 12 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரும் வழக்கு வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்த பின்னர் 11 எம்எல்ஏக்களுடன் ஓபிஎஸ் தனித்து செயல்பட்டு வந்தார். சசிகலா முதல்வராக பதவியேற்க இருந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறை செல்ல நேரிட்டது.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை எம்எல்ஏக்கள் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுத்ததை அடுத்து ஆளுநரிடம் ஆட்சி அமைக்க எடப்பாடி உரிமை கோரினார். அப்போது அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து 15 நாள்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டார்.
அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது முதல்வருக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
18 பேர் தகுதிநீக்கம்
இந்நிலையில் இரு அணிகளும் ஒன்றிணைந்தன. ஓபிஎஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனிடையே முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார்.
சபாநாயகர் பாரபட்சம்
திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் சபாநாயகர் பாரபட்சம் காட்டுகிறார். கட்சிக்கு எதிராகவும் ,முதல்வருக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறி 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தார்.
தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள்
முதல்வருக்கு எதிராக வாக்களித்த ஒரே கட்சியை சேர்ந்த ஓபிஎஸ் உள்பட 12 பேரை இதுவரை தகுதி நீக்கம் செய்யாதது ஏன். இவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் வெற்றி வேல் மற்றும் ரங்கசாமி கடிதம் கொடுத்து 6 மாதங்கள் நிலுவையில் உள்ளது.
அக்.27க்கு ஒத்திவைப்பு
18 பேரையும் நீக்கக் கோரி கொறடா கடிதம் கொடுத்தவுடன் சபாநாயகர் அவர்களை நீக்கி நடவடிக்கை எடுத்துவிட்டார். எனவே அந்த 12 பேரையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் திமுக கொறடா சக்கரபாணி குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் புகார் குறித்து சபாநாயகர், பேரவை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.