ஓபிஎஸ் மீது வருத்தம்... விலகிவிட்டேன்... இனி தொகுதி மக்களை கேட்டு முடிவு- ஆறுகுட்டி எம்எல்ஏ
ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிவிட்டதாகவும் ஈபிஎஸ் அணிக்கு மாறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று ஆறுகுட்டி எம்எல்ஏ கூறியுள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் அணியில் இருந்து தாம் விலகிவிட்டதாகவும், வேறு அணிக்கு செல்வது பற்றி வேறு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் எம்.எல்.ஏ ஆறுகுட்டி கூறியுள்ளார்.
ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி அணியில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுகுட்டி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இது தொடர்பான தகவல்களை ஆறுகுட்டி எம்எல்ஏ மறுப்பு தெரிவித்துள்ளார்.
தொகுதி மக்களை சந்தித்து பேசிய பின்னர் முடிவெடுப்பேன் என்று கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ஆறுகுட்டி எம்எல்ஏ, ஒபிஎஸ் தரப்பு தன்னை புறக்கணிப்பதால், அதிருப்தி இருந்ததாகவும், அதனால் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
தொகுதி மக்களையும் தொண்டர்களையும் சந்தித்த பின்னர் முடிவெடுப்பேன் என்று கூறினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் என்னை அழைக்காததால் அதிருப்தி இருந்தது. எனக்கு ஓபிஎஸ் மீது வருத்தம் இருந்தது. அதனால் விலகிவிட்டேன்.
யாரை நம்பியும் அரசியலுக்கு வரவில்லை. தொகுதி மக்களை நம்பி மட்டுமே அரசியலுக்கு வந்தேன் என்னை நம்பி ஓட்டுப்போட்ட மக்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும். அதை செய்யாமல் நான் சும்மா இருக்க முடியாது.
என்னுடைய நிலை மாற உள்ளது. நான் மட்டும் தனியாக போவேனா, எல்லாரும் சேர்ந்து போவார்களா என்பது தெரியாது.
டிடிவி தினகரன் அவர் பாட்டுக்கு இருக்கிறார். சசிகலா சிறையில் இருக்கிறார் அவரைப்பற்றி எதுவும் பேச முடியாது. சசிகலா முதல்வராக வேண்டும் என்று நான் பேட்டியே கொடுத்திருக்கிறேன்.
ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிவிட்டேன். வேறு எந்த அணியில் சேருவது என்று முடிவு செய்யவில்லை என்றும் எம்எல்ஏ ஆறுகுட்டி கூறியுள்ளார்.