வீதி வீதியாக பிரசாரத்தில் குதித்த ஓ.பன்னீர் செல்வம்.. களை கட்டுகிறது ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்!
சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத் தேர்தலில் எந்த முக்கியக் கட்சியும் போட்டியிட முன்வராத நிலையில் அதிமுக தனது பிரசாரத்தைத் தொடங்கி விட்டது. அமைச்சர்கள் குழு குழுவாக தொகுதியை வலம் வர ஆரம்பித்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்காக காலி செய்யப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதிக்கு வருகிற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை திமுக, பாமக, தமாகா, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன.
காங்கிரஸ், பாஜக, தேமுதிக, மதிமுக நிலைப்பாடு தெரியவில்லை. இடையில் டிராபிக் ராமசாமியை பொது வேட்பாளராக்குவது தொடர்பான யோசனைகளும் வலம் வருகின்றன. அவரும் சில தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க அதிமுக மறுபக்கம் தேர்தல் களத்தை சூடாக்கி வருகிறது. அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் நேற்று நடந்தது. விழாவுக்கு, அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். விழாவில், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் இரா.விசுவநாதன், எடப்பாடி கே.பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, வி.செந்தில்பாலாஜி, தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், டாக்டர் சி.விஜயபாஸ்கர், பி.பழனியப்பன் உள்பட அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி, செங்கோட்டையன் எம்.எல்.ஏ., உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தேர்தல் பணிமனை திறக்கப்பட்டதை தொடர்ந்து, தண்டையார்பேட்டையில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர், தேர்தல் பிரசாரத்தை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் மேற்கொண்டனர். கும்பிட்ட கையோடு சாலையில் சென்ற பேருந்துகளில் இருந்த பயணிகள், சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள், கடைகளில் இருந்த வியாபாரிகள் ஆகியோரிடம் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.