சசி அண்ட் கோ கட்சியில் இருக்கும் வரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை.. ஓபிஎஸ் 'ஒரேபோடு'
சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இருக்கும் வரை இணைப்பு பேச்சுவார்த்தையே கிடையாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தேனி: சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இருக்கும் வரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இரு அணிகளும் இணைய நிபந்தனை இல்லை என தான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் இரு அணிகளும் இணைய எந்த நிபந்தனையும் இல்லை என்றார். ஓபிஎஸின் இந்த ஒத்த வார்த்தை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
ஓபிஎஸின் நேற்றைய இந்த பேட்டிக்கு பின்னர் தமிழக அரசியல் களத்தில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறின. அமைச்சர்கள் அவசர ஆலோசனை, ஓபிஎஸ் உடன் பேச்சு நடத்த 9 பேர் கொண்ட குழு அமைப்பு என சசிகலா அணி படு வேகமாக வேலையில் ஈடுபட்டு வந்தது.
எதிர்ப்பு எழுந்த நிலையில்..
ஓபிஎஸ் மீண்டும் சசிகலா அணியில் இணையப்போகிறார் என்ற தகவலால் சமூக வலைதளங்களில் ஓபிஎஸ்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தேனி பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
சசி குடும்பத்திற்கு எதிர்ப்பு
அப்போது ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும் ஆட்சியும் போய்விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருப்பதாக தெரிவித்தார். தனது நிலைபாட்டை ஜெயலலிதாவின் நினைவிடத்திலேயே தான் தெளிவுபடுத்திவிட்டதாகவும் அவர் கூறினார்.
பேச்சுவார்த்தைக்கே இடமில்லை
சசிகலா குடும்பம் இருக்கும் வரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். சசிகலா குடும்பம் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பதுதான் தங்களின் நிலைபாடு என்றும் அவர் கூறினார்.
தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது..
சசிகலாவின் குடும்பத்தினர் தவறுக்கு மேல் தவறு செய்து வருவதாகவும் அவர் கூறினார். இரு அணிகளும் இணைய நிபந்தனை இல்லை என்று தான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பெரியகுளத்தில் அளித்த தனது பேட்டியின் மூலம் நேற்று முதல் தமிழக அரசியல்களத்தில் நீடித்த குழப்பங்களுக்கு முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.