ரூபாய் நோட்டு விவகாரம்.. 6 மாதங்கள் ஆனாலும் தற்போதைய நிலைமை மாறாது - சிதம்பரம் கடும் தாக்கு
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சென்னை: ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும் அளவிற்கு இந்திய நாட்டின் பொருளாதாரம் பலவீனமாக இல்லை என்றும் பிரதமர் மோடியின் மோசடி நாடகத்தால் மக்கள் இன்னும் ஆறு மாதத்திற்கு இன்னல்களை அனுபவிப்பார்கள் என்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் பணமதிப்பு இழப்பு பொருளாதாரத்தை முடக்கிய பொறுப்பற்ற செயல் எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், ப.சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த அறிவிப்பு மோடியால் எடுத்த அவசர முடிவு. இந்த மோசடி நாடகத்திற்கு ரிசர்வ் வங்கியும் உடந்தையாக இருந்துள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும் அளவிற்கு இந்திய நாட்டின் பொருளாதாரம் பலவீனமாக இல்லை. இந்த முடிவு எடுக்கப்பட்ட போது நடைபெற்ற விவாதம் மற்றும் சட்ட ஒப்புதல் குறித்த ஆவணங்களை இதுவரை மத்திய அரசு வெளியிடவில்லை. 11 கோடி பேர் தினமும் பணியை விட்டு விட்டு வங்கி வாசலில் நிற்கிறார்கள்.
இன்னும் ஆறு மாதங்கள் ஆனாலும் தற்போதைய நிலைமை மாறாது. இதனால் நாட்டிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். மேலும், இதுவரை ரிசர்வ் வங்கி 62 முறை விதிகளை மாற்றியுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், 400 கோடி ரூபாய் கள்ள நோட்டை ஒழிக்க 15 லட்சத்து 400 கோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது கொசுவை விரட்ட வீட்டைக் கொளுத்துவதற்கு சமம் என்றும் குற்றஞ்சாட்டினார்.
கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி 500,1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ளனர். மாறாக புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய நோட்டுகளால் கருப்பு பணம் வராதா? நிச்சயம் வரும். அரசு பெற்றுள்ள பணத் தாள், அச்சுத் தொழில்நுட்பம் ஓரிரு ஆண்டுகளில் கள்ள நோட்டு அடிப்பவர்களுக்கும் கிடைத்துவிடும். அது கிடைக்கும் வரை அவர்களால் கள்ள நோட்டை அடிக்க முடியாமல் இருக்கலாம். எனவே, இதையும் தடுக்க முடியாது. இதன் காரணமாகத்தான் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழைய நோட்டுகளைத் திரும்ப் பெறும் முறையை நான் நிதியமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தேன். 5 ஆண்டுகளுக்குப் பிறகு பணத் தாள் எண்களை ஏறுமுகம் இறங்குமுக வரிசை மாற்றி அச்சிட்டோம். இதன் மூலம் கள்ள நோட்டுகளையும் கண்டறிந்து தடுக்க முடிந்தது.
மருத்துவக் கல்லூரியில் பிள்ளைக்குச் சீட் வாங்குவதற்காக ஒருவர் சொத்தை ரூ.25 லட்சத்துக்கு விற்கிறார் என்று கொள்வோம். அந்தப் பணம் வீட்டை விற்றவரிடம் இருக்கும்போது வெள்ளைப் பணமாக இருக்கிறது. அதே பணம், கல்லூரி நிர்வாகிகளிடம் செல்லும்போது கருப்புப் பணமாக மாறுகிறது. கல்லூரி நிர்வாகி காசோலையாக வாங்கமாட்டார். பணமாகவே வாங்குவார்.
எனவே, சாதாரணமானவர்களிடம் இருக்கும்போது அது வெள்ளைப் பணமாகவும், ராம மோகன ராவ் போன்றோரிடம் போகும்போது அது கருப்புப் பணமாகவும் மாறிவிடுகிறது. இப்படி கருப்புப் பணம் வாங்கி வைப்பதைத் தடுக்காமல், ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து சாதாரணமானவர்களைத் தண்டிப்பது எந்த வகையில் நியாயம்?
தேவைக்கு ஏற்ப அளிப்பு என்பதுதான் பொருளாதார விதி. தேவையே அளிப்பை நிர்ணயிக்கிறது. எனவே கருப்புப் பணத்துக்கான தேவை இருக்கும் வரை அளிப்பது என்பதும் இருக்கும். முதலில் ஒழிக்க வேண்டியது கருப்புப் பணத்துக்கான தேவையைத்தான்.
லஞ்ச ஒழிப்பு: ஊழலை ஒழிப்பதுதான் இரண்டாம் நோக்கம் என்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் மாநிலத்தில்தான் 2 பொறியாளர்கள் லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வாங்கியது அனைத்தும் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள். எனவே, ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பதன் மூலம் ஊழலை ஒழிக்க முடியாது.
இந்தியாவில் 100 சதவீத பணமில்லாப் பரிவர்த்தனையைக் கொண்டு வரப்போவதாக மோடி கூறியுள்ளார் வலிமையான ஜெர்மனி நாட்டில் 85 சதவீதம் பணம் மூலம்தான் பரிவர்த்தனை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவில் 65 சதவீதம், அமெரிக்காவில் 45 சதவீதம், கனடாவில் 53 சதவீதம், பிரான்ஸில் 55 சதவீதம் பண பரிவர்த்தனை நடைபெறுகிறது.
இந்தியாவில் தற்போது 97 சதவீதம் பரிவர்த்தனை பணம் மூலமே நடைபெறுகிறது. 45 சதவீதம் பண பரிவர்த்தனை உள்ள நாடுகளே பணமில்லா பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்த முடியாதபோது, இந்தியாவில் அது தற்போது சாத்தியம் இல்லை. இந்தியாவில் 7 லட்சம் கிராமங்கள் உள்ளன. ஒரு கிராமத்தில் கூட இந்தக் கருவிகள் இல்லை. பிறகு எப்படி பணமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். எந்த விதத் திட்டமிடலும் இல்லாமல் மோடி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.