"ஜோசஃப் விஜய்"... மத அடையாளத்தை பெருமையாக கூறிய விஜய்க்கு ப.சிதம்பரம் பாராட்டு
தன்னுடைய அடையாளத்தை பெருமையாக கூறிய நடிகர் விஜய்க்கு பாராட்டுகள் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தன்னுடைய உண்மையான அடையாளத்தை பெருமையாகக் கூறிய நடிகர் விஜய்க்கு பாராட்டுகள்என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. அதில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா ஆகியவைக்கு எதிராக வசனங்கள் பேசப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் ஜோசஃப் விஜய்யின் மோடி மீதான கோபமே மெர்சல் என்று நடிகர் விஜய்யின் மதத்தை குறிப்பிடும் அளவுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்,ராஜா கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கு ரசிகர்கள், நடுநிலையாளர்கள் என அனைவரும் கொதித்தெழுந்தனர். இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு மெர்சல் படத்தை வெற்றியடையச் செய்தவர்களுக்கு நடிகர் விஜய், ஜோசஃப் விஜய் என்ற லெட்டர் பேடிலேயே நன்றி அறிக்கையையும் வெளியிட்டிருந்தார்.
ஆம் நான் ஜோசஃப் விஜய்தான் என்று எச்.ராஜாவுக்கு விஜய் சொல்லாமல் சொல்லிய பதில் போல் பார்க்கப்பட்டது. நியூஸ் 18 தமிழ் சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகையில் விஜய்யை ஜோசஃப் விஜய் என்று கூறி அவமானப்படுத்தியவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.
ஆனால் அது அவமானம் அல்ல. அது ஒரு அடையாளம் என்று பெருமையாக ஜோசப் விஜய் என பொறிக்கப்பட்டுள்ள லெட்டர் பேடில் குறிப்பிட்டுள்ளார் விஜய். அவருக்கு எனது பாராட்டுகள் என்றார் ப.சிதம்பரம்.