காவிரி விவகாரத்தில் தமிழக அரசு விழிப்போடு செயல்பட வேண்டும் - பெ.மணியரசன்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் குறைக்கப்படாமல் தமிழ்நாடு அரசு விழிப்போடு செயல்பட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் (30.9.2016) கர்நாடக அரசின் சட்டவிரோதச் செயல்களையும் நீதிமன்ற அவமதிப்புச் செயல்களையும்க கடுமையாகக் கண்டித்தது ஆறுதல் தருகிறது.
நீதிபதிகள் தீபத் மிஸ்ரா - யூ.யூ. லலித் அமர்வு இது கடைசி எச்சரிக்கை என்றுசொல்லிவிட்டு அக்டோபர் 1 முதல் 6 வரை தமிழ் நாட்டிற்கு நொடிக்கு 6000 கன அடிதண்ணீர் திறந்து விட வேண்டுமென்று கர்நாடகத்திற்கு கட்டளை இட்டிருப்பது வரவேற்தக்கது.
நடுவண் அரசு அக்டோபர் 4 க்குள் காவிரி மேலாண்மை வாரியம், மற்றும் காவிரி ஒழுங்கு முறைக் குழு அமைத்து அறிக்கைதர வேண்டுமென்று கட்டளை இட்டிருப்பது பாராட்டுக்குரியது. காலந்தாழ்ந்த நீதிஎன்றாலும் தமிழ்நாட்டிற்குப் பயன் தரும்தீர்ப்பாகும். இதற்காகப் போராடிய, வாதாடிய அனைத்து உழவர் அமைப்புகள், அனைத்துவணிகர் அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட தமிழ் மக்கள் அனைவர்க்கும் இந்த வெற்றியில் பங்கிருக்கிறது.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தனக்கானதலைமை வழக்கறிஞராக சேகர் நபாதே அவர்களை அமர்த்தியதிலிருந்து நம் தரப்புவாதம் கூர்மையாக எடுத்து வைக்கப்பட்டது. நடுவண் நீர் வளத்துறை அமைச்சர் கூட்டிய இருமாநில முதலமைச்சர் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா அளித்த அறிக்கையும் சிறப்பாக இருந்தது. அவர்களுக்கு நம்பாராட்டுகள்.
பக்ரா - பியாஸ் மேலாண்மை வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு வழங்க வேண்டுமென்று காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு கூறுகிறது. இதில் தமிழ்நாடு அரசுவிழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவேண்டும். நடுவண் நீர்வளத்துறை செயலாளர் சசி சேகர், காவிர் மேலாண்மை வாரியத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான சில கருத்துகளை அண்மையில் கூறியிருந்தார்.
அதுபோல் எதுவும் நடந்தால் அந்தத் தவறை உடனடியாக உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்று சரிசெய்திட தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும். இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன் முறைகள் நடந்தால் உடனடியாக இராணுவத்தை அனுப்பி தமிழ் மக்களைப் பாதுகாக்குமாறு தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்த வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.