ஆம் ஆத்மி வேட்பாளராக களமிறங்கும் உதயக்குமார்: கன்னியாகுமரியில் போட்டியிட 600 கையெழுத்து
கன்னியாகுமரி: கன்னியாகுமரி தொகுதியில் உதயகுமார் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து 600 பேரின் கையெழுத்து சேகரிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மக்கள் ஒன்று திரண்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் நூறு பொதுமக்களிடமிருந்து கையெழுத்து பெற்று,ஆறு தொகுதிகளிருந்து ம் அறுநூறு கையெழுத்துக்களை சேகரித்து, பொதுமக்கள் சார்பில் அருட்பணியாளர் ஆண்டனி கிளாரெட், சிலேட்
பத்திரிகை ஆசிரியர் லெட்சுமி மணிவண்ணன், கவிஞர் என்.டி.ராஜ்குமார், கவிஞர் ஜி.எஸ்.தயாளன் உட்பட முப்பதுக்கும்
அதிகமானோர் எஸ்.பி. உதயகுமாரை நேரில்
சந்தித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் கன்னியக்குமரி யில் போட்டியிட வேண்டுமென்றும் கையெழுத்து பிரதிகளை கொடுத்து கேட்டுக் கொண்டனர்.
அதுபோல ஆம் ஆத்மி கட்சியினரையும் நேரில் சந்தித்து வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட வேண்டுமென்றுஅனைவரும் உதயகுமாரை வற்புறுத்தி வருவதாகவும் கூறப் படுகிறது.
அணு உலைக்கு எதிராக
நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கடந்த 900 நாட்களாக போராடி வருகின்றனர்.
இந்த மக்களை தங்களது கட்சியில் உறுப்பினர்களாக சேர்த்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் சுமார் 15 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.
7500 தொண்டர்கள்
ஒவ்வொரு தொகுதியின் தேர்தல் பணிக்கும் சுமார் 7 ஆயிரத்து 500 தொண்டர்களை களமிறக்க தீர்மானித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தமிழ் நாடு மாநில கிளை நிர்வாகிகள், கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
உறுப்பினர் சேர்க்கை
இதில் ஒரு கட்டமாக, உதயகுமார் தலைமையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் போராடி வரும் மக்களை தங்களது கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிட்டு, அந்தப்
பணியில் தற்போது மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
15 தொகுதிகளில் போட்டி
உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும், வேட்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணலை நடத்தி, தமிழ்நாட்டில் சுமார் 15 தொகுதிகளில் ஊழல் கரை படியாத புதிய முகங்களை நிறுத்துவதற்கு ஆம்
ஆத்மி கட்சி தயாராகி வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
குழப்பத்தில் உதயகுமார்
இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் உதயக்குமார் போட்டியிட போராட்டக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி கட்சி
உதயகுமார் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து போட்டியிடுவதற்கு போராட்டக்களத்தில் இருக்கும் தமிழர் களம் அமைப்பை சேர்ந்த அரிமாவளவன், புஷ்பராயன், முகிலன், மை.பா.ஜேசுராஜன் உள்ளிட்டவர்களுக்கு ஈடுபாடு இல்லை. காங்கிரஸ், பாரதிய ஜனதாவைப்போல ஆம் ஆத்மியும் டெல்லியை அடிப்படையாக கொண்டவர்களின் கட்சிதான். தமிழர்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள். எனவே ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்கவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
குழப்பத்தில் உதயகுமார்
ஞாயிறன்று கூடங்குளத்தில் உதயக்குமாரை, தூத்துக்குடியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள். ஆனால் போராட்டக்குழுவில் உள்ள மற்றவர்கள் இதில் ஆர்வமில்லாமல் ஒதுங்கிவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கும் சூழலில் உதயக்குமார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தமது பேஸ்புக்கில் "தாம் மனக்குழப்பத்தில் இருப்பதாக' தகவல் தெரிவித்துள்ளார். எனவே நாடாளுமன்றத் தேர்தலில் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மற்றும் கடலோர மீனவ மக்களின் எதிர்ப்பை ஒன்றிணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.