2001ல் ஜெயலலிதா ஏன் பதவி விலக நேர்ந்தது..?-...பிளாஷ்பேக்!!
சென்னை: ராமாயணத்தில் ராமர் வனவாசம் சென்றபோது அவரின் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து அயோத்தியை அரசாண்டார் தம்பி பரதன்.
அதேபோல 2001ம் ஆண்டில் முதல்வர் என்ற பதவி அளிக்கப்பட்டாலும் தனக்கென எந்த ஒரு தனி சலுகையும் எடுத்துக் கொள்ளாமல் அம்மாதான் எல்லாம், நான் சும்மதான் என்று கூறும் வகையில் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த முதல்வர் பதவியை பன்னீர்செல்வத்தை தவிர வேறு யாராலும் பத்திரமாக பாதுகாத்து தன்னிடம் திரும்ப ஒப்படைக்க முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டதால்தான் ஜெயலலிதா, மீண்டும் அவரை முதல்வராக தேர்வு செய்துள்ளார். தற்போதைய நிகழ்வு போலவே 2001ம் ஆண்டும் இதேபோல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம்.
எதிர்பார்த்த தீர்ப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதை ஜெயலலிதா எதிர்பார்த்தே இருந்தார். அதனால்தான் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அதிமுகவினரின் ஒற்றுமை பற்றி அத்தனை உருக்கமாக தலைமைச் செயலகத்தில் பேசினார்.
அமைச்சரவைக் கூட்டம்
தீர்ப்பு முன்பாக அவசரம் அவசரமாக அமைச்சரவை கூட்டம் கூடியது. அப்போது புதிய முதல்வர் யார் என்பதை கூடி பேசி முடிவெடுத்துவிட்டனராம். எனவேதான் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகத்தில் இரண்டுமுறை ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார் என்கின்றனர்.
டான்சி வழக்கில் தீர்ப்பு
டான்சி வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி எனத் தீர்ப்பளித்து மூன்றாண்டுகள் தண்டனையும் வழங்கியிருந்தது சிறப்பு நீதிமன்றம். இதில் அவர் ஜாமீன் பெற்றிருந்தாலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை இருந்தது.
முதல்வரான ஜெயலலிதா
இந் நிலையில் 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டபோதும், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க பெரும்பான்மையான இடங்களில் வென்றது. இதனையடுத்து அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி, தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே (14-5-2001) ஜெயல்லிதாவை முதல்வர் பதவியேற்க அனுமதித்து, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார், சட்டத்தையும் விதிகளையும் காற்றில் பறக்கவிட்டபடி...
பதவியிழந்த ஜெயலலிதா
மூன்றாண்டுகள் தண்டனை பெற்ற ஒருவருக்கு பதவிப்பிரமாணம் செய்தது செல்லாது எனத் தொடரப்பட்ட பொது நல வழக்கில், கவர்னர் பாத்திமா பீவியின் செயலைக் கண்டித்து, ஜெயல்லிதாவின் பதவிப் பிரமாணத்தை ரத்து செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
2001 செப்டம்பர் 21
இந்தத் தீர்ப்பு வெளியான 2001ம் ஆண்டு செப்டம்பர் அன்று மாலையில் அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அதில், "முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்தை நியமிக்கிறேன்' என்றார் ஜெயலலிதா. இதை யாராலும் நம்ப முடியவில்லை.
தினகரன் ஆதரவாளர்
பெரியகுளம் எம்.எல்.ஏ.வாக இருந்த பன்னீர்செல்வம் அப்போதைய பெரியகுளம் தொகுதியின் எம்.பி.யும் ஜெயலலிதாவிடம் தனி செல்வாக்கு பெற்றிருந்தவருமான தினகரனின் ஆதரவாளராகவும் இருந்தார். இதனால் சசிகலாவுக்கும் நெருக்கம். ஜாதிரீதியிலும் சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானார். அந்த நெருக்கவே அவரை முதல்வர் பதவி வரை கொண்டு சென்றது.
அடக்கமான அமைச்சர்
இத்தனைக்கும் 2001ம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் 10வது இடத்தில் தான் இருந்தார் ஓ.பி. வருவாய் மற்றும் பத்திரப் பதிவுத்துறை என வளம் கொழிக்கும் இலாகைவை கையில் வைத்திருந்தாலும் அடக்கமான அமைச்சர் என்று மட்டுமே அறியப்பட்டவர் பன்னீர்செல்வம்.
முக்குலத்தோர் சமூகம்
ஜெயலலிதா- சசிகலா உள்பட அனைவரிடமும் பணிவு காட்டுபவர். அதனால்தான் முக்குலத்தோர் இனத்தின் மறவர் சமுதாயத்தைச் சேர்ந்த பன்னீருக்கு முதல்வர் பதவி கிடைத்தது.
மறுத்த பன்னீர் செல்வம்
ஆனால், தன்னை முதல்வராக தேர்வு செய்தபிறகு ஜெயலலிதாவிடம், "அம்மா எனக்கு பதவி வேண்டாம்மா' என்று கதறி அழுதபடி காலில் விழுந்து மறுத்தவர் பன்னீர் செல்வம். அந்தப் பணிவே அவருக்கு அப்போதைய தற்காலிக முதல்வர் பதவியை இன்னும் உறுதி செய்தது.
162 நாட்கள் முதல்வர்
டான்சி வழக்கின் மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்து, ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டு ஜெயித்து மீண்டும் முதல்வராகும்வரை 162 நாட்கள் முதல்வர் நாற்காலியைக் கட்டிக் காத்தார் ஓ. பன்னீர்செல்வம்.
முதல்வர் நாற்காலியில் அமராமலேயே..
அதுவும் முதல்வர் அலுவலகத்தில் முதல்வர் நாற்காலியில் அமராமலேயே ஆட்சி நடத்தியவர் ஓ.பி. முதல்வர் நாற்காலிக்கு அருகே இன்னொரு சேரைப் போட்டு, அம்மா உட்காரும் சேரை தினமும் தொட்டுக் கும்பிட்டுவிட்டு வேலையை ஆரம்பிப்பார். அப்போது ஜெயலலிதா ஜெயிலில் இல்லை. போயஸ் கார்டனில் இருந்தார். இதனால் முக்கிய பைல்களை அம்மாவிடம் காட்டிவிட்டே கையெழுத்து போட்டு வந்தார்.
சட்டமன்றத்தையே கூட்டாமல்..
சட்டமன்றக் கூட்டம் நடத்தினால் முதல்வர் இடத்தில் உட்கார வேண்டும் என்பதால் சட்டமன்றத்தையே கூட்டாமல் ஆட்சி நடத்திய முதல் முதல்வரும் நமது ஓ.பி. சார் தான்.
ஜெயலலிதா அருகே இல்லாமல் ஆட்சி...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று முதல்வர் ஜெயலலிதா சிறைக்குச் சென்றுள்ளதால் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். கடந்த முறை போல இவருக்கு உதவ ஜெயலலிதா போயஸ் கார்டனில் இ்ல்லை.
நட்ராஜ்- ஷீலா கட்டுப்பாட்டில்
மீசை நட்ராஜ், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகிய மாஜி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தான் ஆட்சியை நடத்தப் போகின்றனர். இவர்களிடம் ஆலோசித்தே எந்த முக்கிய முடிவையும் ஓ.பி எடுத்தாக வேண்டும்... இந்த முறை எத்தனை நாட்கள் முதல்வராக பதவி வகிப்பார் என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.
யாரும் இவரைப் பற்றி ஜெயலலிதாவிடம் எக்குத்தப்பாக போட்டுக் கொடுக்காத வரை காலம் ஓடும்.. பாவம் பன்னீர்செல்வம்...