"SC தான நீங்க".. ஜாதியோடு கூடிய கிராமத்தின் பெயரை மாற்றக்கோரி இன்று தேர்தல் புறக்கணிப்பு
விருதுநகர்: தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் கிராமத்தின் பெயரில் உள்ள ஜாதியின் பெயரை நீக்க வேண்டும் என்று கூறி தேர்தலை புறக்கணிப்பதாக பரச்சேரி எனும் கிராமத்தை சேர்ந்த மக்கள் அறிவித்துள்ளனர்.
சமூகத்தில் மட்டுமின்றி பெயரிலும் புறக்கணிக்கப்பட்டு இருக்கும் கடைக்கோடி கிராமத்தின் கதை தான் இது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம் தவிழ்ந்தான் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தலித் மக்கள் வசிக்கும் கிராமம் உள்ளது. அதன் பெயர் பரச்சேரி.

தலித் மக்கள் வசிப்பதை அடையாளப்படுத்தும் வகையில் இந்த கிராமத்தின் பெயர் உள்ளது. அரசு ஆவணங்களிலும் இந்த பெயரே பதிவாகி உள்ளது. இதனை மாற்றம் செய்ய வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இன்று வரை யாரும் செவிசாய்க்கவில்லை.
இதனால் அங்கு வசிக்கும் தலித் மக்கள் இன்று நடக்கும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இதுபற்றி அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் கூறுகையில், ''தலித் மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் பரச்சேரி என பெயர் உள்ளது. இந்த பெயரை மாற்றம் செய்ய வேண்டும். எங்கள் கிராமத்துக்கு வடக்கு அச்சம் தவிழ்ந்தான் என பெயர் வைக்க வேண்டும் என போராடி வருகிறோம். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்'' என்று கூறியுள்ளனர்.
இதுபற்றி அங்கு வசிக்கும் குமார் என்பவர் கூறுகையில், ''தனி மனிதனை ஜாதி பெயர் வைத்து அழைக்க கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால் கிராமத்தின் பெயரே ஜாதியை குறிப்பிடும்படியாக உள்ளது. ஆனால் கிராமத்தின் பெயரையே பரச்சேரி என சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?'' என தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
அதேபோல் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் பிரதீபா கூறுகையில், '' நான் பணி தேடியபோது என் முகவரியை பார்த்ததுமே ஜாதியை புரிந்து கொண்டு காலியிடங்கள் இல்லை. அடுத்து காலியிடங்கள் வரும்போது அழைக்கிறோம் என்று கூறியுள்ளனர். மறுநாள் என்னுடைய தோழி இண்டர்வியூ சென்றார். அவர் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர். அவர் தேர்வு செய்யப்பட்டார். அந்த பொண்ணுக்கு தான் மரியாதை இருந்தது. அதிகமான மதிப்பெண் எடுத்து இருந்தாலும் ரிஜெக்ட் செய்துள்ளனர்'' என்றார்.
இந்த கிராமத்தின் பெயர் மட்டும் பிரச்சனை இல்லை. அங்கு அடிப்படை வசதியும் இல்லை. சமூகநீதி பேசும் தமிழகத்தில் தங்களின் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக இன்று நடக்கும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கிராமத்தின் முக்கிய இடத்தில் பேனர் வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications