3-ஆவது நாளாக பதற்றம் நீடிக்கிறது... தூத்துக்குடிக்கு துணை ராணுவம் விரைகிறது
தூத்துக்குடியில் 3-ஆவது நாளாக பதற்றம் நீடிக்கிறது. போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாததால் துணை ராணுவத்தை அனுப்புமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கட்டுப்படுத்த போலீஸார் திணறுவதால் துணை ராணுவத்தை அனுப்புமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை 100-ஆவது நாளை எட்டியது. இதையொட்டி தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேஷிடம் மனு கொடுக்க பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.
அவர்கள் வழியிலேயே மடத்துக்குளம் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். எனினும் போலீஸாரையும் மீறி கட்டுக்கடங்காத கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றது. அப்போது அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

தடியடி
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீஸார் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தினர். இதை எதிர்கொள்ள முடியாமல் போலீஸ் குழுவினர் தப்பி ஓடினர். இந்நிலையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த மக்கள் மீது மீண்டும் தடியடி நடத்தப்பட்டது.

13 பேர் பலி
மீண்டும் கோபமடைந்த மக்கள் அலுவலகத்தை சூறையாடினர். அப்போது போலீஸார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். இவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

போராட்டம்
ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி மகேந்திரன் ஆகியோர் பதவி விலகினால்தான் உட்ல்களை வாங்குவோம் என்று மருத்துவமனையில் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த ஆட்சியரை உள்ளே விடாமல் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். போலீஸார் துணையுடன் அவர் தப்பி ஓடினார்.

கட்டுப்படுத்த
இதையடுத்து மீண்டும் தடியடி, துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்நிலையில் இன்றஉ மூன்றாவது நாளாக பதற்றம் நீடிக்கிறது. தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் திணறுகின்றனர்.

விரைகிறது துணை ராணுவம்
எனவே துணை ராணுவத்தை அனுப்புமாறு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக் கொண்டார். இதன்படி துணை ராணுவப் படையினர் விரைவில் தூத்துக்குடிக்கு வருகை தருகின்றனர் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications