காதலனைத்தான் மணப்பேன்.. மகள் பிடிவாதம்... வீட்டை விட்டு ஓடிய தாய், தந்தை!
தர்மபுரி: காதலைக் கைவிட மாட்டேன். நீங்கள் எவ்வளவு எதிர்த்தாலும் சரி நான் காதலிப்பவரைத்தான் மணப்பேன் என்று மகள் கண்டிப்பாக கூறியதால், எங்கே மகள் வீட்டை விட்டு ஓடி விடுவாரோ என்று பயந்து போய் பெற்ற தாய், தந்தை வீட்டை விட்டு வெளியேறியது தர்மபுரி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுரோட்டை சேர்ந்தவர் துரைசாமி. இவது மகள் கவிதா. இவரும் கொக்காரப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். காதலைக் கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால் கவிதா தனது காதலைக் கைவிட மறுத்து விட்டார். அத்தோடு, நீங்கள் எவ்வளவு எதிர்த்தாலும் பிரகாஷைத்தான் மணப்பேன். அதை யாரும் தடுக்க முடியாது என்றும் பிடிவாதமாக கூறி விட்டார்.
இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் கடந்த 19ம் தேதி குலதெய்வம் கோவிலுக்குப் போவதாக கூறி விட்டு மனைவி விஜயாவுடன் வெளியேறினார் துரைசாமி. ஆனால் வீடு திரும்பவில்லை.
காணமல் போன துரைசாமியையும், அவரது மனைவி விஜயாவையும், பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்காததை அடுத்து, அவர்களது மூத்தமகள் லலிதா புதன்கிழமை எ.பள்ளிப்பட்டி போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீஸார் மகளின் காதலுக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியேறிய தாய், தந்தையை தேடி வருகின்றனர்.
வழக்கமாக காதலிப்பவர்கள்தான் வீட்டை விட்டு ஓடுவார்கள்.. ஆனால் இங்கோ பெற்றோர் வெளியேறியிருப்பது அப்பகுதியி்ல பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications