நாளைக்கு இந்தக் கட்சிகளுக்கும் இதே நிலைமைதான் வரும்...!
சென்னை: ஜெயலலிதா இல்லாவிட்டால் அதிமுக இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. ஆனால் இதேபோன்ற நிலையில் தமிழகத்தில் வேறு சில கட்சிகளும் கூட உள்ளன.
"சிங்கிள்" தலைவருடன் இயங்கி வரும் கட்சிகள் என்றாலே கட்டாயம் கஷ்ட காலம் ஒரு நாளைக்கு வரத்தான் செய்யும். அந்தத் தலைவர் இல்லாவிட்டால் கட்சி கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போய் விடும்.
இன்று அதிமுகவுக்குக் கூட அந்த பிரச்சினைதான். இதற்கு முக்கியக் காரணம், 2ம் கட்ட அளவில் நல்ல தலைவர்களை, புத்திசாலித்தமானவர்களை வைத்துக் கொள்ளாமல், வளர்த்து விடாமல் விடுவதுதான்.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு
எம்.ஜி.ஆர் இருந்தபோதே அதிமுகவில் 2ம் கட்டத் தலைவர்களில் ஸ்டிராங்கானவர்கள் என்று யாருமே இல்லை. பலர் பொம்மைகள்தான். ஆனால் சில புத்திசாலிகளையும் கூடவே வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.. அந்த வகையில் ஜெயலலிதா அப்படி செயல்படவில்லை. எல்லோருமே அவருக்கு பொம்மைகளாகத்தான் இருந்தனர்.
ஜெயலிலதாவுக்குப் பிறகு
தற்போது ஜெயலலிதா இல்லாவிட்டால் அதிமுக இல்லை என்ற நிலை. காரணம், அவரைச் சுற்றிலும் இருப்பவர்கள் வெறும் ஜால்ரா பார்ட்டிகளே. அவர் இல்லாமல் போனால் கட்சி காலாவதியாகி விடும் என்ற நிலைதான் தற்போது உள்ளது. அதை 2 முறை அவர் சிறைக்குப் போனபோது அதிமுக அனுபவித்த விட்டது.
இன்னும் சில கட்சிகள்
இதேபோன்ற நிலையில் மேலும் சில கட்சிகளும் உள்ளன. அதைப் பார்ப்போம்.
தேமுதிக
தேமுதிகவின் கொள்கை என்ன என்று கூட யாருக்கும் இதுவரை தெரியாது. விஜயகாந்த் பார்த்து ஏதாவது பேசுவார். அவர் பார்த்து ஏதாவது செய்வார். அவர் தனித்து நிற்க முடிவு செய்தால் தனித்து நிற்பார்கள். கூட்டணி சேர்ந்தால் கூட மாடப் போவார்கள்.
உருப்படியாக ஒருவரும் இல்லை
விஜயகாந்த் கட்சியில் உருப்படியாக ஒருவருமே இல்லை என்பது எல்கேஜி குழந்தைக்குக் கூடத் தெரியும்.
அவரே சரியில்லையே
மேலும் விஜயகாந்த்தே கூட இன்னும் ஒரு முழுமையான, பக்குவமான தலைவராக மாறவில்லை. வளரவில்லை. அவர் பேசும் பேச்சைப் பார்த்தாலே தெரியும். தெளிவில்லாத ஒரு முக்கியமான அரசியல் தலைவர் என்றால் அது விஜயகாந்த்தான்.
அவர் இல்லாவிட்டால்
விஜயகாந்த் தலைவராக இருக்கும்போதே அவரது கட்சியினரை அவரால் தக்க வைக்க முடியவில்லை. பல எம்.எல்.ஏக்களைப் பறி கொடுத்தார். முக்கியத் தலைவர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், ஆஸ்டின் போன்றோர் அவரை விட்டுப் போய் விட்டார்கள். இந்த நிலையில் விஜயகாந்த்துக்குப் பிறகு இந்தக் கட்சியில் யார் உள்ளனர் என்றால் யாருமே இல்லை என்பதுதான் உண்மை.
சரத்குமார் கட்சி
இதேபோலத்தான் சரத்குமார் கட்சியும். அவரது தலைமையிலும் கூட கட்சி வலுவானதாக இல்லை. அவரது வாரிசாக மனைவி ராதிகா, முழுநேர அரசியல் தலைவராக வருவாரா என்பது சந்தேகம்தான்.
மதிமுக
இதே நிலைதான் மதிமுகவிலும் உள்ளது. வைகோவை விட்டால் அங்கு யாருமே இல்லை. ஆனாலும் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஒரு உண்மையான தலைவராக வைகோ இருக்கிறார். எனவேதான் எத்தனை அலை அடித்தாலும் மதிமுக மட்டும் தேயாமல் அப்படியே இருக்கிறது. வலுவான அரசியல் சக்தியாக மட்டுமே அது மாறாமல் போய் விட்டது. அது மட்டும்தான் சற்று சோகமானது.
சுயநலம்
இப்படி நிறையக் கட்சிகள் சிங்கிள் தலைவர்களுடன் தடுமாறிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இந்த அவல நிலைக்கு முக்கியக் காரணம், தாங்கள் மட்டும், தன்னால் மட்டுமே என்ற தலைவர்களின் சுயநலமும் கூட முக்கியம் என்று கூறலாம்.