அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியது: மதுரை எஸ்பி
அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்று மதுரை மாவட்ட எஸ்பி விஜேந்திர பிதரி தெரிவித்துள்ளார்.
மதுரை: அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது என மதுரை எஸ்பி விஜேந்திர பிதாரி தெரிவித்துள்ளார். மேலும் 2 கிராமாங்களில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த 16ம் தேதி முதல் மாணவர்கள், இளைஞர்கள், கிராம பொதுமக்கள் இரவு, பகலாக தொடர் போராட்டம் நடத்தினர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் வீதியில் திரண்டு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே அலங்காநல்லூரில் நடைபெற்று வந்த தொடர் போராட்டத்தின் போது திடீரென போலீசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். 41 பேரை கைது செய்தனர் பின்னர் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர்.
இதனால் கடந்த 14 நாட்களாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் அலங்காநல்லூர், பாலமேட்டில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
இந்நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது என மதுரை எஸ்பி விஜேந்திர பிதாரி தெரிவித்துள்ளார். கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மறுநாளே விடுவிக்கப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 23ம் தேதிக்கு பிறகு யாரையும் கைது செய்யவில்லை எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் என விஜேந்திர பிதாரி தெரிவித்துள்ளார்.