அனல் காற்று வீசப்போகுது... ஜாக்கிரதை மக்களே!: எச்சரிக்கும் வானிலையாளர்கள்
சென்னை: சென்னையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இன்னும் இரு தினங்களில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அனல்காற்று வீசக்கூடும் என்றும் 104 டிகிரி பாரன்ஹீட் அளவைத் தாண்டி வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வெளுத்து கட்டிய மழையால் வெள்ளம் பெருக்கெடுத்த பகுதிகளில் எல்லாம் இப்போது வெயில் கொளுத்தி வருகிறது கூடவே அனல்காற்றும் வீசுவதால் மக்கள் தவித்து வருகின்றனர்.
கோடை துவங்குவதற்கு முன்பே வெயில் தகித்து வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவே அஞ்சுகின்றனர். பல மாநிலங்களில் வெயில் 110 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டு விட்டது. உத்திரப்பிரதேசத்தில் வெயிலுடன் வெப்பக் காற்றும் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் 108 டிகிரியை தாண்டி விட்டதால் மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கோடைவெயில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் உக்கிரம் அதிகமாக இருக்கும். ஜுன் 15ம் தேதிக்கு பிறகு வெயில் தாக்கம் படிப்படியாக குறையும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தில் வெயில் அளவு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்திலேயே வெயில் உக்கிரம் காட்டத் தொடங்கிவிட்டது.
சதமடித்த வெயில்
கடந்த 1 மாதகாலமாகவே தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. வேலூர் மற்றும் உள் மாவட்டங்களில் வெயில் அளவு இப்போதே அக்னி நட்சத்திர காலத்தை நினைவுபடுத்தும் வகையில் வாட்டி வதைக்கிறது.
கொதிக்கும் சாலைகள்
தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. அதிகபட்சமாக திருச்சியில் 104 டிகிரியாக வெப்பம் கொதித்தது. திருப்பத்தூர், சேலம் மற்றம் பரமத்திவேலூரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் சூரிய வெப்பம் பதிவானது. தருமபுரி, மதுரை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் 102 டிகிரி வெப்பம் பதிவானது.
104 டிகிரி வெயில்
இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் நாளை புதன்கிழமையும், மறுதினம் வியாழனன்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை விட கூடுதலாகவே தகிக்கும் என்று வானியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
110 டிகிரியை தாண்டும்
ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, எல் நினோ போன்ற காரணங்களால் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்போதே வெயில் 104 டிகிரியை கடந்து பதிவாவதால் இந்த ஆண்டு கோடையில் தமிழகத்தில் அதிகபட்சமாக 110 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அனல்காற்று
பகலில் அனல் காற்று வீசவும் வாய்ப்புள்ளது. ஜுன் 2ம் வாரம் வரை வெயில் 100 டிகிரிக்கு குறையாமல் அடிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளிர் பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானலிலும் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக உள்ளது.
குளிர்பானங்களை நாடும் மக்கள்
வெயில் காரணமாக குளிர்பானங்கள், பழங்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் குளிர்பான கடைகளில் குவிகின்றனர். வாகனங்களில் செல்வோர் தகிக்கும் அனலை சமாளிக்க முகம் மற்றும் தலையை துணிகளால் முகத்தை மூடிக்கொண்டு செல்கின்றனர்.
அக்னி நட்சத்திரம்
மே மாதம் முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகி விடும் அப்போது வெயிலின் தாக்கம் 110 டிகிரியை எட்டும் என்று இப்போதே எச்சரிக்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.
குடிநீருக்கு பாதிப்பு
சுட்டெரிக்கும் சூரியனால் ஏரிகளில் தேங்கிய தண்ணீர் வற்றி வருகிறது. முக்கிய அணைகளிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்த வண்ணம் உள்ளது. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது. கர்நாடகா, மராட்டியம் போல தமிழகத்திலும் விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.