ஜெ.வை கொன்றது சசி கும்பல்தான் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்: ஸ்டாலின் பரபர பேச்சு
ஜெயலலிதாவை கொன்றது சசிகலா மற்றும் அவரது குடும்பம் தான் என்பதில மக்கள் தெளிவாக உள்ளனர் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவை கொன்றது சசிகலா மற்றும் அவரது குடும்பம் தான் என்பதில மக்கள் தெளிவாக உள்ளனர் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதா மரணம் உண்மையானதா? மர்மானதா? அதன் பின்னால் என்ன இருக்கிறது என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவை கொன்றது யார் என மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். அப்போது பேசிய ஸ்டாலின் சசிகலா தலைமையில் உள்ள பினாமி ஆட்சி ஒழிய வேண்டும் என்றும் என்றார். அவர் மேலும் பேசியதாவது,
எங்கே பார்த்தலாம் ஒரே பேச்சுதான்
"இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய நிலைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறதா? அல்லது அதற்கு முன்பு சட்டமன்ற தேர்தல் வரப்போகிறதா? அல்லது இதே ஆட்சி நீடிக்கப்போகிறதா? இப்போதெல்லாம் எங்கே பார்த்தாலும் ஒன்றைப்பற்றிதான் பேசுகிறார்கள்.
எப்போ முடிக்கப் போறிங்க?
இங்கே பேசுகிறபோது கூட சிலர் சொன்னார்கள், நானும் காலையில் நடைப்பயிற்சி போகிறேன். அப்போது பிராமண வகுப்பை சேர்ந்த வயது முதிர்ந்த தாய்மார்களை எல்லாம் நான் சந்திக்கிறேன். ஏன், நீதி அரசர்களை, சில டாக்டர்களை எல்லாம் நான் சந்திக்கிறேன். ஆக, தொடர்ந்து, இன்று கூட என்னிடம் கேட்டார்கள், என்ன இன்னும் முடிக்க மாட்டேன் என்கிறீர்களே என்று கேட்கிறார்கள்.
பினாமி ஆட்சி ஒழிய வேண்டும்
சட்டம் படித்திருக்கிறார்கள். ஆனால், கட்சித் தாவல் தடை சட்டம் ஒன்று இருக்கிறது என்பதை மறந்து கேட்கிறார்கள். அவர்களுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. சசிகலா தலைமையில் இருக்கக்கூடிய இந்த பினாமி ஆட்சி ஒழிய வேண்டும்.
ஜெ.உடன் அரசியலில் வேறுபாடு உண்டு
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களுடன் அரசியலில் நமக்கு கருத்து வேறுபாடுகள், மாறுபாடுகள் இருக்கலாம், அவர்களின் கொள்கையில் நமக்கு உடன்பாடு இருக்க வாய்ப்பே கிடையாது. அதுவேறு.
ஜெ. மரணத்துக்கு பின்னால் என்ன இருக்கிறது?
ஆனால், முதலமைச்சராக இருந்து மறைந்திருக்கிறாரே, அது உண்மையான மரணமா?, இல்லை மர்மமான மரணமா? அந்த மரணத்துக்கு பின்னால் என்னென்ன இருக்கிறது?
மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்
இன்றைக்கு தெளிவாக நம்மை விட, உங்களை விட, நம்முடைய கட்சியை விட, பொதுமக்கள் உறுதியாக இருக்கிறார்கள். விசாரணை வைத்துதான் தீர்ப்பு தர வேண்டும் என்றில்லை. மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்.
ஜெயலலிதாவை கொன்றது சசிகலாதான்
ஜெயலலிதாவை கொன்றது சசிகலாதான், சசிகலா குடும்பம்தான், சசிகலா கும்பல்தான் என்று தெளிவாக இருக்கிறார்கள். ஆக, அதை நாம் அப்படியே வைத்திருக்க வேண்டும். விட்டுவிடக் கூடாது.
நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது
நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. அதற்கு நீங்கள் பயன்பட போகிறீர்கள். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இவ்வாறு ஸ்டாலின் திமுக மகளிர் அணியின் மகளிர் தின விழாவில் பேசினார்.