ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி போராட்டம்- 2 வது நாளாக கொந்தளிப்பில் தென் மாவட்டங்கள்!
மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் பொது மக்கள் இன்று 2வது நாளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு இன்று காலை மாடுபிடி வீரர்கள், காளை உரிமை யாளர்கள், ஜல்லிக்கட்டு பேரவையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ஜல்லிக் கட்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அலங்காநல்லூரில் பல இடங்களில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
வாடிவாசல் முன்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடு பிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அலங்காநல்லூரில் 2 ஆவது நாளான இன்றும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் சுற்று வட்டாரங்களில் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி அலங்காநல்லூரிலும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
பாலமேட்டிலும் 2 ஆவது நாளாக போராட்டங்கள் நடந்தன. இன்று காலை பாலமேடு பஸ் நிலைய மெயின்ரோட்டில் மாடு பிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு இருந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறனர். ஆனால் மறியல்காரர்கள் கலைந்து செல்லவில்லை.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் பாலமேடு பஸ் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இங்கும் இன்று பஸ்கள் இயக்கப்படவில்லை.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி இன்று காலை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், விழா கமிட்டியினர் தடுப்புகளை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ஊர்வலமாக வாடிவாசலுக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 8 பேர் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மொட்டை போட்டுக் கொண்டனர்.
இதனால் அங்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி, ஊமச்சிக் குளம், காஞ்சரம்பேட்டை பகுதிகளிலும் இன்று பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.