தமிழக - கேரளா எல்லையில் ஒற்றை புலியால் பீதி.. கூண்டு வைத்து கண்காணிக்கும் வனத்துறை
செங்கோட்டை: தமிழக-கேரள எல்லை பகுதியிலுள்ள புளியரை வனப்பகுதியில் மாடு, ஆடுகளை வேட்டையாடி வரும் ஒற்றைப் புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து, இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர்.
தமிழக-கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான தமிழக பகுதியைச் சேர்ந்த புளியரையிலும், கேரள பகுதியைச் சேர்ந்த ஆரியங்காவு பகுதியிலும் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் புலி, யானை, சிறுத்தைப்புலி, கரடி போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், புளியரை ஸ்ரீ.மூலப்பேரி நீர்தேக்கம் பகுதியில் ஒற்றை புலி ஒன்று கடந்த சில மாதங்களாக நடமாடி வருகிறது. இப்புலி ஆரியங்காவு வனப்பகுதியை ஒட்டியுள்ள சிலரது வீடுகளுக்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஆடு, மாடுகளை வேட்டையாடியது.
வெள்ளிக்கிழமை கேரள மாநிலம் ஒத்தக்கல் பகுதியை சார்ந்த பார்வதியம்மாள் என்பவரது வீட்டில் வளர்த்த பசுமாட்டை தாக்கி கொன்றது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதையடுத்து தொடர்ந்து அச்சுறுத்தி வரும் அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். அதில் நாய் ஒன்றையும் விட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications