சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் இயக்கம் திமுக... ஸ்டாலின்
கோவை: திமுக சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் இயக்கமாகும். வரும் தேர்தலில் திமுகவுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவையில் இன்று ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 115 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், பொதுவாக நான் பிறந்த நாள் விழாக்களில் கலந்து கொள்வது கிடையாது. எனது பிறந்த நாள் முடிந்து 2 மாதங்கள் ஆகின்றன. இருந்த போதிலும் இந்த விழாவில் நான் பங்கேற்ற காரணம் 115 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது என்பது ஒன்று தான். தி.மு.க. சார்பில் முதலில் இந்த விழாவில் 65 ஜோடிகளுக்கு தான் திருமணம் நடத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது 115 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தி.மு.க. சொன்னதை மட்டும் அல்ல சொல்லாததையும் செய்யும் இயக்கம் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்று 6 மாதங்களாகியும் இன்னும் முதல்வர் அறைக்கு சென்று முதல்வரின் இருக்கையில் அமரவில்லை. அதிமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்று 4 வருடங்களாகியும் தொழில் முனைவோர் மாநாடு நடத்தப்படாதது குறித்து நான் கேள்வி எழுப்பினேன். இதற்கு தொழில் துறை அமைச்சர் செப்டம்பரில் மாநாடு நடத்த உள்ளதாகவும், திமுக இதில் அரசியல் செய்கிறது என்றும் விமர்சனம் செய்துள்ளார்.
திமுக என்றும் மக்கள் நலனை விரும்பும் கட்சியாகும். திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு உள்ளன. செம்மொழி மாநாடு நடத்திய போது ரூ.100 கோடி மதிப்பீட்டில் கோவையில் பாலம் அமைக்க தலைவர் கருணாநிதி அறிவித்தார். அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த திட்டம் முடக்கப்பட்டது. இதுகுறித்து திமுக கேள்வி எழுப்பியதும் தற்போது மீண்டும் திட்டத்தை செயல்படுத்துவது போல் பாவனை செய்கிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் கட்சி திமுக ஆகும். எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.