கூவத்தூரில் அதிமுக அட்டூழியம்.. தடுக்காத போலீஸ்.. ஆளுநர், முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கூவத்தூரில்அட்டகாசம் செய்த அதிமுகவினர் மீதும், தடுக்காத போலீஸ் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் கிராமத்தில் அதிமுகவினர் என்ற போர்வையில் ரவுடிகளும், குண்டர்களும் செய்து வரும் அட்டகாசம், அட்டூழியம் மக்களை கடும் கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது. மக்களையும், பத்திரிகையாளர்களையும் தாக்கிய குண்டர்களைத் தடுக்காத போலீஸார் மீது ஆளுநர் மற்றும் முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்து காவல் காத்துக் கொண்டிருக்கிறது சசிகலா தரப்பு. இவர்களை பாதுகாப்பதற்காக வெளியூர்களிலிருந்து குண்டர்களைக் கொண்டு வந்து தங்க வைத்துள்ளனர். இவர்கள் அந்தப் பகுதியையே ஸ்தம்பிக்க வைத்து வருகின்றனர் கடந்த 4 நாட்களாக. உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். யாரையும் அந்தப் பக்கமே விட மாட்டேன் என்று இக்கும்பல் அடாடவடி செய்கிறது.
இந்த நிலையில் பத்திரிகையாளர்களையும் அக்கும்பல் தற்போது தாக்கத் தொடங்கியுள்ளது. இன்று அக்கும்பல் பத்திரிகையாளர்களின் செல்போன்களைப் பிடுங்கிச் சென்று விட்டது. அதைத் தட்டிக்கேட்டவர்களைத் தாக்கவும் செய்தனர். ஒவ்வொருவரும் பல சிறை பார்த்த பெரும் குண்டர்களாக காணப்பட்டனர். ஆனால் அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸார் அந்த நபர்களைத் தடுக்கவில்லை. தட்டிக் கேட்கவில்லை கைது செய்யவும் இல்லை. மாறாக பத்திரிகையாளர்களை இங்கிருந்து போய் விடுங்கள் என்று விரட்டினர்.
ஆனால் வெகுண்டெழுந்த பத்திரிகையாளர்களும், அவர்களுக்குத் துணையாக ஊர் மக்களும் சாலை மறியலில் குதித்தனர். அந்த வழியாகத்தான் சசிகலா சென்னைக்குத் திரும்ப வேண்டும். ஆனால் பத்திரிகையாளர்களின் போராட்டத்தால் அவரால் திரும்ப முடியவில்லை. இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் சிலர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் அதிமுக குண்டர்களின் அட்டகாசம் குறித்து பத்திரிகையாளர்கள் முறையிட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பறித்த பொருட்களைத் திரும்ப ஒப்படைத்தனர் அதிமுகவினர்.
இதெல்லாம் பெரிதில்லை.. இன்று சசிகலா வருகிறார் என்ற ஒற்றை காரணத்திற்காக நேற்றை விட அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். கிட்டத்தட்ட 1000 போலீஸார் என்று கூறுகிறார்கள். ஒற்றை தலைவருக்காக இத்தனை போலீஸ் பாதுகாப்பு ஏன். அங்கிருந்த குண்டர்களும், ரவுடிகளும் பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர். தாக்குகின்றனர், பத்திரிகையாளர்களை மிரட்டுகின்றனர், செல்போன்களைப் பிடுங்கிச் செல்கின்றனர்.
இதைத் தடுக்க வேண்டிய போலீஸார் ஏன் வேடிக்கை பார்க்கிறார்கள். ஏன் அந்த குண்டர்களைப் பிடித்து கைது செய்து வேனில் ஏற்றாமல் வேடிக்கை பார்த்தார்கல் என்பதுதான் புரியவில்லை. எதற்காக அவர்கள் பயப்படுகிறார்கள். எந்த அதிகாரத்திலும் இல்லாத ஒரு கும்பலைக் காக்க குவிக்கப்படுகிறது போலீஸ். ஆனால் அப்பாவி மக்களும், மக்களுக்கு நடப்பைத் தெரிவிக்கத் துடிக்கும் பத்திரிகையாளர்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க மறுக்கிறது, கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
தமிழக பொறுப்பு ஆளநரும், முதல்வரும் உடனடியாக தலையிட்டு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியிடம் விளக்கம் கேட்க வேண்டும், ஒரு சட்டவிரோத கும்பல் நான்கு நாட்களாக அட்டகாசம் செய்து வரும் அக்கிரமத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தாக்குதலைத் தடுக்காத போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கிய குண்டர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும். கூவத்தூர் மக்கள் நிம்மதியாக தங்களது இயல்பு வாழ்க்கையைத் தொடர உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டியது ஆளுநர் மற்றும் முதல்வரின் கடமை என்று மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.