சும்மா இருக்க விடுங்க… மாதொருபாகன் பட விளம்பரத்தால் பெருமாள் முருகன் அதிர்ச்சி
சென்னை: 'மாதொருபாகன்' என்ற பெயரில் திரைப்பட விளம்பரம் வெளியானதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெருமாள் முருகன், ‘சும்மா இருக்க' அனுமதியுங்கள் என்ற வேதனையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்' என்ற நாவலுக்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்டதோடு, இனி எழுத்து சார்ந்த அனைத்து நடவடிக்கைகளிலும் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தது எழுத்தாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நாவல் பிரச்னை நீதிமன்றம் வரை சென்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் நாவலாசிரியர் பெருமாள் முருகனையும் சேர்க்க வேண்டும் என்றும், அப்போதுதான் அவரது நிலை குறித்து இந்த நீதிமன்றம் தெரிந்துகொள்ள முடியும் என்றும் கூறியிருந்தது.
ஏற்கனவே எழுதுவதற்கு விடை கொடுத்த வேதனையில் இருக்கும் பெருமாள் முருகனை, மேலும் நோகச்செய்யும் விதமாக அவர் எழுதியுள்ள நாவலான ‘மாதொருபாகன்' என்ற பெயரில் திரைப்பட விளம்பரம் ஒன்று பத்திரிகையில் நேற்று வெளியானது.
பெருமாள் முருகன் அறிக்கை
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெருமாள் முருகன், ‘சும்மா இருக்க' அனுமதியுங்கள் என்ற வேதனையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
12.1.15 அன்று ‘மாதொருபாகன்' நாவலுக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டதோடு ‘பெருமாள்முருகன் செத்துவிட்டான்' எனத் தொடங்கும் அறிக்கையை வெளியிட்டபின் எழுத்து சார்ந்த அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகிய மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை.
நெருக்கடியான சூழலில் ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருந்ததோடு வழிகாட்டுதல்களையும் வழங்கியவர்கள் பெரும்பான்மையான நூல்களை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பக நண்பர் கண்ணன், வரலாற்றறிஞர் ஆ.இரா.வேங்கடாசலபதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், செயலர் சு.வெங்கடேசன், முன்னாள் நீதிபதி கே.சந்துரு, வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் உள்ளிட்டோர்.
அதே போலப் பல்வேறு அமைப்புக்களும் எழுத்தாளர்களும் நண்பர்களும் உதவினர். அவர்கள் எவர்மீதும் குறை காண எந்தக் காரணமும் இல்லை. ஏனெனில் மனநிலைக்கும் சூழலுக்கும் ஏற்ற விதத்தில் சுயமாகவே முடிவெடுக்க நேர்ந்தது. முடிவிலும் மனநிலையிலும் எந்த மாற்றமும் இல்லை.
எனினும் இந்தப் பரபரப்பையும் சூழலையும் பலர் தங்களுக்கேற்ற விதத்தில் பயன்படுத்திக்கொள்ள முயல்வது மிகுந்த வருத்தம் தருகிறது. ‘மாதொருபாகன்' என்னும் தலைப்பில் ஒரு திரைப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தத் தலைப்பையோ கதையையோ எவ்விதத்திலும் பயன்படுத்த யாருக்கும் எந்த உரிமையும் வழங்கவில்லை.
தயவுசெய்து பெருமாள்முருகனின் விலகலும் விடுபடலுமான உணர்வுகளையும் மனநிலையையும் புரிந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். எதிலும் தொடர்புபடுத்தாமல் ‘சும்மா இருக்க' அனுமதிக்குமாறும் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.