ஒரு கிலோ உப்பு ரூ. 25,000.... அரை கிலோ குங்குமம் ரூ. 9000... கரூரில் ஒரு கலகலப்பு ஏலம்!
கரூர்: கரூரில் நடைபெற்ற பிள்ளையார் நோன்பு விழாவில் ஒரு கிலோ உப்பு ரூ 25 ஆயிரத்திற்கு ஏலம் போனது. அதேபோல அரை கிலோ குங்குமம் ரூ. 9000க்கும், 10 எலுமிச்சம்பழம் ரூ. 7000க்கும் ஏலம் போனது.
உலகெங்கும் வாழும் நாட்டுகோட்டை நகரத்தார் சமுதாய மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கூட்டு வழிபாடாக அன்பு தழைக்கவும், உறவுகள் மேம்படவும் பிள்ளையார் நோன்பு விழாவினை கொண்டாடுவது வழக்கம்.
திருவண்ணாமலை தீபத்தன்று விரதம் துவங்கி இருபத்தொரு நாள் விரதமிருந்து சஷ்டியும் சதயமும் கூடும் நாளில் பொது இடங்களில் ஒன்று கூடி இந்த விழா நடைபெரும்.
அகவல் பாடி
விநாயகப்பெருமானை எழுந்தருளச்செய்து அகவல் பாடி மாவிளக்கு அல்லது திரட்டுப்பாலில் பிள்ளையார் போல இசை பிடித்து அதில் 21 நாளை குறிக்கும் நூல் திரியிட்டு சமூகப்பெரியவர்கள் அதைச் சுட்ரேற்றி விநாயகருக்கு காட்டி கொடுக்க குழந்தைகள் பெரியவர்கள் ஆண்கள், பெண்களும் அனைவரும் அதை அப்படியே விழுங்கி நோன்புகளைவர்.
நெல் பொரி- அவல் பொரி
நெல்பொரி, அவல்பொரி, எள் உருண்டை, கடலை உருண்டை, கருப்பட்டி பணியாரம் என 21 வகையான பலகாரம் நைவேத்யமாக படைத்து மங்களப் பொருட்களான உப்பு, மஞ்சள், தேங்காய்கள், வாழைப்பழம், எழுமிச்சைபழம், கற்கண்டு, சர்க்கரை குழந்தைகள் சட்டை, விளக்கு, குலவாழும் பிள்ளையார், வீடு, மணமாலை என ஏலம் நடத்துவர். அதன்பின் நோன்பு விருந்து நடைபெறும்
கரூர் பசுபதீஸ்வரர் கோவில்
கரூர் பசுபதீஸ்வரன் கோயில் அருகே உள்ள ராணி சிதை ஆச்சி மஹாலில் நடைபெற்ற இந்த விழாவில் கரூர், புலியூர், கரிக்காலி, குளித்தலை, முசிறி, அய்யர்மலை, வாங்கல், புகளூர் என மாவட்டத்தின் பலபகுதிகளில் வாழும் நகரத்தார் சமுதாயத்தினர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்குப் பரிசு
கல்வி உதவித்தொகைகளும், கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் 80 விழுக்காடு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணாவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்ச்சியில் சங்க தலைவர் சுப.செந்தில்நாதன், பொருளாளர் கும.குமரப்பன, கரு.ரெத்தினம், முத்தையா, லெட்சுமணன், மேலை.பழனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மங்களப் பொருட்கள் ஏலம்
தொடர்ந்து நடைபெற்ற மங்களப்பொருட்கள் ஏலத்தில் பங்கு கொண்டன. இதில் ஒரு கிலோ உப்பு ரூ 25 ஆயித்திற்கும், 10 எலுமிச்சைபழங்கள் ரூ 7 ஆயிரத்திற்கும், அரை கிலோ குங்குமம் ரூ 9 ஆயிரத்திற்கும் ஏலம் போனது. இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் நகரத்தார் சங்கத்தினர் செய்திருந்தனர்.