கதை திருட்டு விவகாரம்: காலா திரைப்படத்துக்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு- ரஞ்சித்துக்கு நோட்டீஸ்!
காலா திரைப்படத்தின் கதை மற்றும் டைட்டில் தன்னுடையது என்று உரிமை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜசேகர் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை: கதை திருட்டு விவகாரத்தில் காலா திரைப்படத்துக்கு தடை கோரி ராஜசேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
கபாலி படத்தை இயக்கிய பா. ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கும் படம் காலா கரிகாலன். இது ரஜினியின் 164-ஆவது படம். இதன் படப்பிடிப்புகள் கடந்த 28-ஆம் தேதி மும்பையில் தொடங்கியது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

தலைப்புக்கு வரவேற்பு
படத்தின் தலைப்புக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கும ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இணையதளத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் ஏராளமானோர் கண்டுகளித்தனர். கரிகாலன் என்பது ரஜினிகாந்துக்கு பிடித்தமான பெயராகும்.

வாகனங்களில் ஸ்டிக்கர்
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து ரஜினிகாந்தின் இரு போஸ்களையும் ஸ்டிக்கர் அடித்து ரசிகர்கள் தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி அதகளப்படுத்தினர். இந்த படத்தில் ரஜினியோடு ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

கதை கரு என்னுடையதாக்கும்
ரஜினி நடிக்கும் காலா படத்திற்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காலா திரைப்படத்தின் தலைப்பு, கதைக் கரு தன்னுடையது என ராஜசேகர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பதிவு செய்த பெயர்தான் காலா
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் 1996 -ஆம் ஆண்டே காலா பெயரை தான் பதிவு செய்திருப்பதாக ராஜசேகர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் அப்படத்தின் கதையை ஏற்கெனவே இயக்குநர் ஒருவரிடம் தெரிவித்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் காலா படத்துக்கு தடை கோரி ராஜசேகர் , சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராஜசேகரின் குற்றச்சாட்டு குறித்து ஜூன் 15-ஆம் தேதிக்குள் இயக்குநர் பா. ரஞ்சித்தும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications