பிரதமரான பிறகு அரசு விழாவில் பங்கேற்க முதன்முறையாக இன்று சென்னை வருகிறார் மோடி
சென்னை : பிரதமரான பிறகு நரேந்திர மோடி முதல்முறையாக இன்று சென்னை வருகிறார். இன்று நடைபெறும் கைத்தறித் துறை விழாவில் அவர் பங்கேற்கிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கைத்தறி நெசவாளர்கள் விழா சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.

மத்திய அரசு நடத்தும் இந்த விழாவில் தென் மாநிலங்களைச் சேர்ந்த 3,000 நெசவாளர்கள் பங்கேற்கிறார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 1,000 நெசவாளர்களும் கலந்து கொள்கின்றனர்.
சிறந்த நெசவாளர்ளுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன. பொதுவாக இந்த விழா டெல்லியில் நடைபெறுவதுதான் வழக்கம். முதல் முறையாக இம்முறை சென்னையில் நடைபெறுகிறது.
பிரதமர் வருகையை முன்னிட்டு, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் சென்னைக்கு வந்து விமான நிலையம், நிகழ்ச்சி நடக்கும் சென்னை பல்கலைக்கழக வளாகம், பிரதமர் வந்து செல்லும் பாதை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பிரதமர் செல்லும் பாதையில் நடக்கும் மெட்ரோ ரயில் பணிகள் இன்று மட்டும் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், சென்னை பல்கலைக் கழகம், மத்திய அரசின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்ப்பதற்காக 2014 ஜூன் 29-ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டா செல்லும் வழியில் சென்னை வந்த அவரை, முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் விமான நிலையத்தில் சந்தித்து பேசினர். அதன் பிறகு அவர் தமிழகத்துக்கு வருகை தரவில்லை.
எனவே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதன்முறையாக சென்னைக்கு வருகை தரும் மோடிக்கு விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. வினர் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications