அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே புதைப்பதா?: போராட்டக்குழுவினர் எச்சரிக்கை
கூடங்குளம்: அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே புதைப்பது நமது கடலையும், கடல் உணவையும், நிலத்தடி நீரையும் முழுவதுமாக நச்சாக்கி விடும் என்று போராட்டக்குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கூடங்குளம் அணுமின் நிலைய வரவு-செலவு பற்றிய முழு விசாரணை வேண்டும் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசிடமும் மற்றும் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நீதி கேட்கும் விதத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக்காரர்கள் 5 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.
எஸ்.பி உதயகுமார், புஸ்பராயன், பங்குத்தந்தைகள் ஜெயக்குமார், மை.பா.நன்மாறன், தோழர் முகிலன், கூடங்குளம் ராஜலிங்கம், இடிந்தகரை ஜெபஸ்தியான், இடிந்தகரை பெண்கள் மெல்ரெட், சுந்தரி,அந்தோனியம்மாள்.மற்றும் செவியரம்மாள்ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.
இடிந்தகரை சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் இன்றும் வேலைக்குப் போகாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் பேசிய மத்திய அமைச்சர் நாராயணசாமி கூடங்குளம் அணுஉலைக் கழிவுகள் கூடன்குளத்திலேயே புதைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். கூடங்குளம் கழிவுகள் கர்நாடக மாநிலம் கோலாரில் புதைக்கப்படும் என்று அணுசக்தித் துறை உச்சநீதிமன்றத்திலே தெரிவித்தபோது, காங்கிரஸ், பா.ஜ.க., சி.பி.எம்., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் கடுமையானப் போராட்டத்தில் ஈடுபட்டு, அந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்தினார்கள். அப்போதைய கர்நாடக முதல்வர் பா.ஜ.க.வைச் சார்ந்த ஜெகதீஷ் ஷட்டர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோர் கர்நாடக மாநிலத்தில் எங்கேயும் புதைக்கவிட மாட்டோம் என்று சூளுரைத்தார்கள். இப்போது அமைச்சர் நாராயணசாமி மிகவும் அனாயசமாக கூடங்குளத்திலேயே புதைப்போம் என்று அறிவிக்கிறார்.
இது தென் தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையும் ஒரு மிக ஆபத்தான முடிவு. தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் இந்தத் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை புதைப்பது நமது கடலையும், கடல் உணவையும், நிலத்தடி நீரையும் முழுவதுமாக நச்சாக்கி விடும்.
போராட்டம் நடத்தியதால் ரூ. 2,500 கோடி அதிகமாக செலவாகி இருப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருக்கிறார். ஆனால் திட்ட மதிப்பீட்டில் ரூ. 4,௦௦௦ கோடி அதிகமாக செலவானதற்குக் காரணம் ரஷ்யா கொடுத்திருக்கும் கடனுக்கு அதிக வட்டி ஆகிவிட்டது என்று இந்திய அணுமின் கழகம் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கிறது.
2005-ஆம் ஆண்டே துவங்கப்பட வேண்டிய திட்டம் தரமற்ற பொருட்களாலும், ஊழல்களாலும் தாமதமாகிக் கொண்டே போவதை மறைப்பதற்காக காங்கிரஸ் அமைச்சர் இப்படி திசைதிருப்பிக் கொண்டிருக்கிறார்.
கூடங்குளம் அணுமின் நிலைய வரவு-செலவு பற்றிய முழு விசாரணை வேண்டும் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.