பாமக எம்.எல்.ஏக்கள் 2 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு.. அதிரடி காட்டிய ராமதாஸ்!
சென்னை: பாமக எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம் மற்றும் மயிலம் சிவக்குமாரின் கட்சிப் பதவிகளை பறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக ராஜேந்திரன், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக கனல் பெருமாள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பாமகவில் அதிகார மோதல் உச்ச கட்டத்தில் உள்ளது. அண்மையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல் தலைவராக செயல்படுவார் என்றும் இனி தானே பாமக தலைவர் என்றும் அறிவித்தார். இதனால், பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மிகக் கடுமையான மோதல் வெடித்தது.
பாமகவில் நடந்து வரும் அதிகார போட்டியில் அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதுடன், அந்த பதவிகளுக்கு புதியவர்களை நியமனம் செய்தும் வருகிறார். இந்நிலையில், பாமகவின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளரும், மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சதாசிவம் இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அவரை நீக்கி உத்தரவிட்டுள்ள கட்சியின் நிறுவனர் ராமதாஸ் புதிய மாவட்டச் செயலாளராக மேட்டூர் அணை வட்டத்திற்குட்பட்ட வெடிக்காரனூர் வி.இ.ராஜேந்திரனை நியமித்து உத்தரவிட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட ராஜேந்திரனுக்கு மேட்டூர், ஓமலூர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேபோல, பாமக எம்.எல்.ஏ மயிலம் சிவக்குமாரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மயிலம் சிவக்குமார், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்த நிலையில், அவர் நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கு கனல் பெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எனவே கட்சியின் பொறுப்பாளர்கள் இந்த புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேரின் மாவட்ட செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டு உள்ளது பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாமகவுக்கு மொத்தம் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆகியோர் ராமதாஸுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் அண்மையில் சேலம் மற்றும் தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், அதே மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான அருள், ஜி.கே.மணி ஆகியோருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications