Neyveli PMK Protest: வன்முறையாக மாறிய என்எல்சி பாமக போராட்டம்.. பதற்றம்.. போலீஸ் தடியடி துப்பாக்கிச்சூடு
நெய்வேலி: பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய என்எல்சி முற்றுகை போராட்டம் கலவரமாக மாறியது. காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதால் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் நிலவுகிறது.
நெய்வேலியில் என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.

என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து அன்புமணி ராமதாஸ் பேசினார். பல கோடி கொடுத்தாலும் நிலத்தை தரமாட்டோம் என்று சொன்னார் அன்புமணி ராமதாஸ். பின்னர், அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்எல்சி நிறுவனத்திற்குள் நுழைவதற்காக பா.ம.க.வினர் புறப்பட்டனர். என்.எல்.சி. வாயில் நோக்கி புறப்பட்ட பா.மக.வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் பதற்றம் உருவானது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர். அன்புமணியை ஏற்றி சென்ற போலீஸ் வாகனத்தை மறித்து பாமக தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறையினர் மீது பாமகவினர் கல் வீசினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் வஜ்ரா வாகனத்தில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர். வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பதற்றம் நிலவியது.
பாமக தொண்டர்கள் கல்வீசி தாக்கியதில் காவல்துறையினர் சிலரது மண்டை உடைந்தது. பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் என்எல்சி நிறுவனத்தின் நுழைவு வாயில் போர்க்களம் போல காணப்பட்டது. ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் நெய்வேலியில் பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications