தமிழக அரசியல் மீண்டும் போயஸ் கார்டன் நோக்கி!
தமிழக அரசியலில் போயஸ் கார்டன் மீண்டும் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கவுள்ளது.
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிக்காந்தின் அறிவிப்பின் மூலம் தமிழக அரசியலில் போயஸ் கார்டன் மீண்டும் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கவுள்ளது.
நடிகர் ரஜினிக்காந்த் அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளார். தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்பு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் அரசியல் வருகைக்கு வரவேற்பும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது.
ஜெயலலிதாவின் முகவரி
சென்னை போயஸ் கார்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் நடிகர் ரஜினிக்காந்த். முன்னதாக மறைந்த தமிழக முதல்வர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள தனது வேதா இல்லத்தில்தான் வாழ்ந்து வந்தார்.
6 முறை முதல்வரான ஜெ.
தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் கட்சியாக இருந்தது அதிமுக. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் 6 முறை பதவி வகித்தவர் ஜெயலலிதா.
முக்கிய இடத்தை பிடித்த கார்டன்
தேசிய அளவில் டாப் கட்சிகளில் ஒன்றாக உள்ளது அதிமுக. அக்கட்சியை கட்டிக்காத்த ஜெயலலிதாவின் முகவரி போயஸ் கார்டன் என்பதால் போயஸ் கார்டனும் தேசிய அளவில் ஒரு முக்கிய இடத்தை சந்தித்தது.
மறைய தொடங்கிய போயஸ்கார்டன்
பிரதமர் மோடி உட்பட பல முக்கிய தலைவர்களையும் போயஸ்கார்டன் சந்தித்துள்ளது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு போயஸ்கார்டனும் அரசியல் அகராதியில் இருந்து மறைய தொடங்கியது.
வேதா நிலையம்
இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலைய இல்லம் அரசுடைமையாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டதால் போயஸ்கார்டன் மீண்டும் செய்திகளில் இடம்பெற்றது.
மீண்டும் இடம்பிடித்த கார்டன்
இருப்பினும் மீண்டும் ஒரு தலைவரை கொடுத்து அரசியலில் போயஸ்கார்டன் இடம்பிடிக்காதா என்ற ஏக்கங்களும் இருந்தன. இந்நிலையில் நடிகர் ரஜினிக்காந்தின் அரசியல் அறிவிப்பால் போயஸ் கார்டன் மீண்டும் தமிழக அரசியலில் இடம்பிடித்துள்ளது.