சுப்பிரமணிய சுவாமி வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது
சென்னை: சுப்பிரமணிய சுவாமி வீட்டை முற்றுகையிட முயன்ற 50க்கும் மேற்பட்டோர் கைது சமீபத்தில் தனியார் டிவிக்கு பேட்டியளித்த சுப்ரமணியசுவாமி, அண்மையில் ராஜபக்சேவை சந்தித்த போத தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்தார். மேலும் தமிழர்களுக்கும், தமிழக அரசியல் தலைவர்களுக்கும் எதிராக பல்வேறு கருத்துகளை சுப்பிரமணிய சுவாமி பேட்டியின் போது கூறியிருந்தார்.
இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் சென்னை மயிலாப்பூர், பாபநாசம் சிவன் சாலையில் உள்ள சுப்ரமணியசுவாமியின் வீட்டை தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட முயன்றனர். அவர்களை கலங்கரை விளக்கத்திற்கு அருகிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்கள் சாமியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுவாமி இலங்கையின் கைக்கூலி என்றும், அவர் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறி இலங்கைக்கே சென்று விட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
சுவாமியின் கருத்துக்களால் பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் சுவாமியின் உருவப்படத்தை தீயிட்டு கொளுத்திய போராட்டக்காரர்கள், அதனை காலில் போட்டு மிதித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.