தென்காசி போலீஸ் ஸ்டேஷனில் கொடியேற்றிய துப்புரவு ஊழியர்! அழைத்து கவுரவித்த இன்ஸ்பெக்டர்!
தென்காசி: தென்காசி காவல் நிலையத்தில் துப்புரவு பணி மேற்கொள்ளும் ஊழியரை தேசியக் கொடி ஏற்ற வைத்து கவுரவித்துள்ளார் காவல் ஆய்வாளர் பாலமுருகன்.
காவல் ஆய்வாளரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்துவிட்ட போதும், இன்னும் பல்வேறு இடங்களில் தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கொடியேற்ற முடியாத அவல நிலை தான் நீடிக்கிறது.

இது போன்ற சூழலில் துப்புரவு பணியாளரை தேசியக் கொடியை ஏற்ற வைத்து தமிழ்நாட்டையே தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன். தாம் ஏற்ற வேண்டிய கொடியை பரந்த மனதோடு பெருந்தன்மையாக பிறருக்கு விட்டுக்கொடுக்கவும் ஒரு மனம் வேண்டும்.
காவல் நிலையத்தில் போலீஸார் தனக்கு வழங்கிய ராஜ மரியாதையை கண்டு திக்குமுக்காடிவிட்டார் துப்புரவு பணியாளர். சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை களையும் வகையில் ஒவ்வொருவரும் பாலமுருகனை போன்று சமத்துவத்தை நிலை நாட்டும் முயற்சிகளை மேற்கொண்டால் பிரச்சனைகளுக்கே இடமிருக்காது.

இதனிடையே இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், வெறுமனே கொடியை மட்டும் ஏற்ற வைக்காமல் காவலர்களின் அரசு அணிவகுப்பு மரியாதையும் துப்புரவு ஊழியருக்கு வழங்கி கவுரவித்துள்ளார். தென்காசியில் நிகழ்ந்த இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பார்க்கப்பட்டு பாராட்டப்பட்டு பகிரப்படுகிறது.












Click it and Unblock the Notifications