புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் பிஏ கொலை விவகாரம்.. டைப்பிஸ்ட் சவுந்தர்யாவிடம் விசாரணை
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக டைப்பிஸ்ட் சவுந்தர்யாவிடம் விசாரணை நடைபெறுகிறது.
திருச்சி: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் பி.ஏ., கொலையான வழக்கில் பெண் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ராஜாகாலனியை சேர்ந்த பூபதி கண்ணன் என்பவர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு அனுராதா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கடந்த 27-ம் தேதி வழக்கம்போல் காரில் பணிக்கு சென்ற பூபதி கண்ணன், அன்று இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
மறுநாள் அவர், மாத்தூர் பகுதியில் காருக்குள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக அறிந்த போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த கொலை கள்ளக்காதல் விவகாரமாக இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து விசாரணையும் மேற்கொண்டனர்.
பூபதி கண்ணனின் செல்போனும் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அவருடன் பணிபுரியும் சவுந்தர்யா என்பவருடன் பூபதி கண்ணன் நீண்ட நேரம் பேசியது தெரியவந்தது. சவுந்தர்யா கணவனை இழந்தவர். இருவருக்குள்ளும் முறையற்ற தொடர்பும் நீடித்து வந்ததும் கண்டறியப்பட்டது.
சம்பவத்தன்றும் பூபதி கண்ணனுடன் சவுந்தர்யா காரில் ஒன்றாக வந்துள்ளார். போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்தபோது அதில் காருக்குள் சவுந்தர்யா உட்கார்ந்திருக்கிறார். இதையடுத்து தனிப்படை போலீசார் சவுந்தர்யாவிடம் விசாரணையை துவக்கியுள்ளனர். இதனையடுத்து மேலும் பல்வேறு தகவல்களும், பூபதி கண்ணன் கொலைக்கான காரணமும், கொலை செய்தவர் யார் என்பதும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.