ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு
அதிமுக எம்.எல்.ஏக்கள் கடத்தல் தொடர்பாக ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழும் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: எம்.எல்.ஏக்களை கடத்தியது தொடர்பாக ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழும் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது கூவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் கடத்தி சிறை வைத்துள்ளது மன்னார்குடி கோஷ்டி. இந்த சிறையில் இருந்து தப்பி வந்தவர் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன்.

கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்து முதல்வர் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் சரவணன். அத்துடன் தாம் கடத்தப்பட்டதாக டிஜிபியிடமும் புகார் கொடுத்தார் சரவணன்.
அவரது புகாரின் பேரின் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது கூவத்தூர் போலீஸ். அதாவது ஐபிசி 342, 343, 365, 353, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஐபிசி 343, 365, 353 ஆகியவை ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளாகும். சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், ரகசியமாக அடைத்து வைத்தல், அரசு ஊழியரைத் தாக்கி அவரது கடமையை கிரிமினல்கள் மூலம் தடுப்பது, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த புகாரின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூவத்தூர் ரிசார்ட்டில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications