இந்த வீட்டைத்தான் நொறுக்கனும்... 8 பேர் ரகசியப் பேச்சு.. பண்ருட்டியார் வீட்டுக்குப் பாதுகாப்பு
தனது வீட்டை எட்டுப் பேர் நோட்டமிட்டதாகவும், இந்த வீட்டைத்தான் அடித்து நொறுக்கனும் என்று பேசிக் கொண்டதாகவும் என்றும் தனக்கு தகவல் வந்ததால் இதுகுறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.
இதுகுறித்து கே.கே.நகர் போலீஸில் பண்ருட்டி ராமச்சந்திரன் புகார் கொடுத்தார். அதன் பேரில் கே.கே.நகர் போலீஸார் பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டுக்குப் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பண்ருட்டியார் கூறுகையில், 'நேற்று முன்தினம், தேமுதிக, பொறுப்பில் இருந்து, நான் விலகிய பின், பத்திரிகையாளர்களுக்கு, பேட்டி கொடுத்து விட்டு வீட்டில் இருந்தேன். அப்போது, என், நலம் விரும்பி ஒருவர் போன் செய்து, என் வீட்டை காரில் வந்த எட்டு பேர் நோட்டமிடுவதாகவும், இந்த வீட்டை தான் அடித்து நொறுக்கணும் என, தங்களுக்குள் பேசிக் கொண்டதாகவும் கூறினார்.
உடனே, இதுகுறித்து, கே.கே.நகர் போலீசிற்கு போன் செய்து சொன்னேன். அவர்கள் உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர் என்றார். பண்ருட்டி ராமச்சந்திரனின் வீடு அசோக் நகர் 13வது அவென்யூவில் உள்ளது.