"பங்கு பாண்டியன்" வீட்டில் நள்ளிரவில் திடீர் ரெய்டு.. கள்ள நோட்டா என்று பரபரத்த அதிமுகவினர்
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கள்ள நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அதிமுக நிர்வாகி வீட்டில் சோதனை நடந்தது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இழுப்பையூரணி மறவர் காலனியை சேர்ந்தவர் பங்குபாண்டியன். இழுப்பையூரணி ஊராட்சி அதி்முக செயலாளராக உள்ளார். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பங்கு பாண்டியன் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் 1 மணி அளவில் கோவிலபட்டி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இருதயராஜ், தனிப்பிரிவு ஏட்டு வைரமுத்து மற்றும் போலீசார் இவரது வீட்டுக்கு சென்று கள்ள நோட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும், இதனால் வீடடை சோதனையிட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பங்கு பாண்டியன் தன்னுடைய வீட்டில் கள்ள நோட்டுகள் இல்லை என்றும், சந்தேகம் இருந்தால் காலையில் வந்து சோதனையிடுமாறும் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் இதை ஏற்று கொள்ளாததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இன்ஸபெக்டர் பவுல்ராஜ் உள்ளிட்ட போலீசார வீட்டுக்குள் சென்று அலமாரி, பீரோ மறறும் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடததினர்.
இதில் கள்ள நோட்டுகள் எதுவும் சிக்கவில்லை. அதிமுக நிர்வாகி வீட்டில் களள நோட்டுகள் இருப்பதாக நள்ளிரவில் போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அஙகு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பங்கு பாண்டியன் கூறுகையில், நள்ளிரவில் போலீசார் அத்துமீறி வீட்டில் நுழைந்து சோதனை நடத்தியுள்ளனர். இதுகுறித்து எஸ்பியிடம் புகார் தெரிவிப்பேன் என்றார்.