அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் நாணயத்தின் இருபக்கம்: ஸ்டாலின்!
சென்னை: அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் ஜனநாயகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் ஜனநாயகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. தேர்தல் ஆணையம் அதனை உணர்ந்து விமர்சனங்களை ஏற்று சிறப்பாக செயல்பட வேண்டும். ஜனநாயகத்தை போற்றி பாதுகாக்கும் உன்னத பணியில் தேர்தல் ஆணையம் உள்ளது. அதிகார துஷ்பிரயோகங்களுக்கு இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்.
தேர்தல் ஆணையம் குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிகாரம் கேட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மீது வழக்கு தொடரும் எண்ணத்தை தேர்தல் ஆணையம் கை விட வேண்டும். அது அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம் என தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவோம் என அதீத வேகம் காட்டுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல. இது குறித்து சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியதாக வரும் செய்தி அதிர்ச்சிகுள்ளாக்கி உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.