தேர்தல் அரசியலில் பகடைக்காயாக உருட்டப்படும் 7 தமிழர் விடுதலை
சென்னை: தமிழக அரசியலில் உச்சகட்ட தேர்தல் காலங்களில் ஆட்சியில் இருப்பவர்களுக்கும், ஆட்சியைப் பிடிக்க போராடுபவர்களுக்கும் கையில் கிடைக்கும் ஒரு ஆயுதமாக "7 தமிழர் விடுதலை" இருந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.
கடந்த லோக்சபா தேர்தலின் போது 7 தமிழர் விடுதலை என்ற அஸ்திரத்தினை கையில் எடுத்த அதிமுக அரசு, மீண்டும் நெருங்கி வருகின்ற சட்டசபை தேர்தலின் போது மக்களின் ஓட்டுக்களை வசமாக்க அதே அஸ்திரத்தினைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளது.
ஒருவகையில் மக்களை ஈர்க்கும் முயற்சி என்றாலும், அது உண்மையிலேயே சாத்தியமானால் ஆளும் தமிழக அரசு பல்வேறு தரப்பினராலும் கொண்டாடப்படும் என்பதும் உண்மை. இல்லை இதுவும் தேர்தல் கால நிலா காட்டி ஏமாற்றும் விளையாட்டு என்றால் படுகுழியில் விழப்போவது ஆளும் கட்சிதான்.

நாற்காலி வேட்டை:
அந்த வகையில்தான் கூட்டணிக்காக கட்சிகள் அலைந்து கொண்டிருக்கின்ற நிலையில் மீண்டும் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு நாற்காலிக்கான சதுரங்க வேட்டையில் எல்லா கட்சிகளுக்கும் "செக்" வைத்துள்ளது என்னவோ உண்மைதான்.

வார்த்தை அரசியல்:
தினம், தினம் வார்த்தைகளால் அரசியல் செய்யும் பேச்சு சித்தர்களுக்கு கிடைத்துள்ள அடுத்த நம்பிக்கையும் இதுதான். சரி அப்படி என்னதான் அவர்கள் குற்றம் செய்தார்கள்? இதன் பின்னணி என்ன? இந்த விவகாரம் ஒவ்வொரு முறையும் ஏன் அரசியல் ஆக்கப்படுகின்றது?

தொக்கி நிற்கும் கேள்விகள்:
ஒரு சாதாரண குடிமகன் விபத்தில் இறந்தாலோ, தவறுதலாக ஒரு அரசியல் போராட்டத்தில் இறந்தாலோ தலைக்கு 1 லட்ச ரூபாயுடன் அவர்களுடைய சாவையே இழுத்து மூடும் அரசியல் கட்சிகள் இப்போது போராடுவது ஏன்? இறந்தவர் முன்னாள் பிரதமர் என்பதற்காகவா இல்லை அவருடன் கூடவே சேர்ந்து உயிரை விட்ட அப்பாவிகளுக்காகவா? கிட்டதட்ட தண்டனைக் காலம் தாண்டிய நிலையிலும் அவர்களின் வாழ்க்கையே முடிவடையும் தருவாயில் சிறைக்குள்ளேயே வைத்து அவர்களை வதைப்பது எவ்வாறு சரியாகும்?

உயிர்விட்ட அப்பாவி மக்கள்:
கடந்த 1991ஆம் ஆண்டு, மே 21 ஆம் தேதியன்று ஸ்ரீபெரும்பதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அவருடன் கூடவே 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அன்று மனித வெடிகுண்டாக செயல்பட்டதாக கூறப்படுபவர் தேன்மொழி ராஜரத்தினம் எனப்படும் "தணு".

திரும்பிப் பார்க்க வைத்த தீர்ப்பு:
இவ்வழக்கு விசாரணை தடா சட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது. சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை அளித்தது. அது இந்தியாவை மட்டுமல்ல உலகையே அதிர வைத்த தீர்ப்பு. இவ்விசாரணை நியாயமானதாக இல்லை என மனித உரிமைகள் குழுக்கள் கண்டனம் தெரிவித்தன.

4 பேருக்கு தூக்கு:
ராஜீவ் காந்தி வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் அவர்களுக்கு எதிரான தீர்ப்புக்கு ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. ஆனால் பின்னர் அவை வற்புறுத்தலின் பேரில் பெறப்பட்டவை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்த பின் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

கருணையால் ஆயுள் தண்டனை:
பின்னர் சோனியாவின் கருணையால் நளினிக்கு கருணை காட்டப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பல்லாண்டு கால வழக்கு விசாரணையின் முடிவில் கருணை மனுவை தாமதமாக ஜனாதிபதி நிராகரித்ததால் எஞ்சிய பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது தூக்கு தண்டனையும் உச்சநீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக்கப்பட்டது.

பேட்டரிக்காக தூக்கு:
இவ்வழக்கில் பேரறிவாளன் மீதான குற்றம் என்னவென்றால் ராஜீவ் காந்தியைக் கொல்லப் பயன்படுத்திய வெடிகுண்டுக்கு 9 வாட் கொண்ட இரண்டு பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பதுதான். மற்றவர்களுக்கும் சிவராசன், தணு, சுபா ஆகியோருடன் தொடர்பு இருந்ததாக கூறியே கைது செய்யப்பட்டிருந்தனர்.

அடங்கிய ஆட்டம்:
எனினும், சிவராசன், தனு, சுபா மூவரைத் தவிர வேறு யாருக்கும் ராஜீவ் கொலை பற்றித் தெரியாது. இதை நீதிபதி வாத்வா தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருக்கிறார். வெறும் 19 வயதே ஆன பேரறிவாளன் பெல்ட் வெடிகுண்டு செய்து கொடுத்ததாகவே ஒரு கட்டத்தில் குற்றம் சாட்டியிருந்தார்கள். எனினும், இதில் சம்பந்தமுள்ளதாக சொல்லப்படும் பல "சாமி"கள் அமைதியாக ஆட்டத்தில் இருந்தே கழன்று கொண்டார்கள் என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் மட்டும் என்னவாம்?:
இத்தகைய பின்னணியில் அவர்கள் குற்றம் செய்திருந்தாலும், செய்யாவிட்டாலும் அளவுக்கு அதிகமாகவே சிறைதண்டனையை அனுபவித்துவிட்டார்கள் என்பது உண்மை. கால் நூற்றாண்டுகாலமாக உடலாலும், மனதாலும் மிகவும் நொந்து போயுள்ள அவர்களை சிறைக்குள்ளேயே வைத்து சித்திரவதை செய்யும் நாமெல்லாமும் கூட கொலைகாரர்களுக்கு சமமானவர்கள்தான்.

ஆதாயம்தான் பிரதானம்:
இவர்கள் விடுதலையாகி விட்டால் நமக்குப் பெயர் கிடைக்காமல் போய் விடுமே என்று சில கட்சிகள் பரிதவிக்கின்றன. அதிமுகவோ இதன் மூலம் ஆதாயம் அடைய முயலுகிறது. எப்படியாவது ஆதாயம் கிடைத்தால் சரித்தான் என்ற நிலையில் பாஜக.

தீர்மானமான முடிவு தேவை:
அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் தமிழக அரசே அவர்களை மாநில அரசு அதிகாரத்திற்கு உட்பட்டு விடுவிக்க அத்தனை சாத்தியக்கூறுகள் இருக்கும் போதிலும், மீண்டும் அதே உப்பு பெறாத இந்திய குற்றவியல் சட்டத்தின் 435வது பிரிவை பிடித்துக் கொண்டு அரசியலாக்கி வருகிறது ஆளும் கட்சி. கூட்டணி தேவை என்று ஒருவேளை முடிவெடுத்தால் மத்தியில் ஆளும் பாஜகவோ இந்த விவகாரத்தில் தலையிட்டு ஒரு தீர்மானமான முடிவை வெளியிட்டே ஆக வேண்டிய சூழ்நிலை.

விட்டுவிடுங்களேன் பாவம்:
இல்லையெனில் தமிழகத்தில் அதன் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும் நிலை. மொத்தத்தில் அரசியலுக்காக அவ்வப்போது உருட்டப்படும் பகடைக் காயாகவிட்டது ஏழு தமிழர் விடுதலை விவகாரம்...
பாவம் அந்த 7 தமிழர்கள்!












Click it and Unblock the Notifications