ஜெ. வழக்கில் கர்நாடக அரசு சட்டப்படியே முடிவு எடுக்கும்: சொல்வது காங். கட்சியின் மிலிந்த் தியோரா
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் கர்நாடகா அரசு சட்டப்படியே முடிவெடுக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மிலிந்த் தியோரா கூறியுள்ளார்.
மத்தியில் பாரதிய அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டில் மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் வகையில் ஒரு வார காலத்துக்கு 100 பிரஸ் மீட்டுகளை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 24 பிரஸ் மீட்டுகளை காங்கிரஸ் கட்சி நடத்தியது. சென்னையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மிலிந்த் தியோரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய பாரதிய ஜனதா அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த ஓராண்டில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
கடந்த காலங்களில் காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டங்களை எதிர்த்த பா.ஜ.க, தற்போது அவற்றின் பெயர்களை மாற்றிக் கொண்டுள்ளது. கருப்பு பணத்தை மீட்போம் என்றார்கள்; அதை செய்யவில்லை. பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் என்றார்கள், அதையும் மேற்கொள்ளவில்லை. விலைவாசி உயர்ந்து விட்டது. விவசாயிகளின் நிலங்களை பறிக்க சட்டம் கொண்டு வந்து இருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் மட்டும் 300 விவசாயிகள் இறந்துள்ளனர். நரேந்திர மோடி உலக நாடுகளுக்கு செல்கிறார். படம் எடுத்துக்கொள்கிறார். இதைத் தவிர அவரது செயல்பாட்டில் எதுவும் இல்லை.
இவ்வாறு மிலிந்த் தியோரா கூறினார்.
பின்னர் அவரிடம், ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்துகின்றனவே, அவர்களிடம் இருந்து அந்த அரசுக்கு நிப்பந்தம் வருகிறதா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், இதில் கர்நாடக காங்கிரஸ் அரசை அரசியல் முடிவுகள், தீர்மானிக்க வைக்க முடியாது. சட்டப்படியான தகுதிகளின் அடிப்படையில்தான் கர்நாடக அரசு முடிவு எடுக்கும் என்றார்.