தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு செப். 18ம் தேதி தேர்தல்- ஆணையர் அறிவிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாகவுள்ள தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தல் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் மதுமதி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் மாநகராட்சியின் துணைமேயராக இருந்த சேவியர் மாநகராட்சியின் பொறுப்பு மேயராக பணியாற்றினார். இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி மற்றும் காலியாகவுள்ள மாநகராட்சியின் 37வது வார்டிற்கான தேர்தல் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சியின் ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மதுமதி கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் இன்று துவங்கி வருகின்ற 4-9-14ஆம் தேதிவரை நடைபெறும்.
வேட்புமனு மீதான பரீசிலனை வருகின்ற 5-9-14 அன்று முற்பகல் 11 மணியளவிலும் அதனை தொடர்ந்து 8-9-14அன்று வேட்புமனுவை திரும்பபெற கடைசி தினமாகும்.
வரும் 18-9-14அன்று தேர்தல் நடைபெற்று 22-9-14அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மாநகராட்சி தேர்தல் பணி குறித்து அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மதுமதி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலுக்கு 282வாக்கு சாவடிகள் அமைக்கப்படும் மாநகராட்சியின் மொத்த வாக்காளர்கள் 2,81,540 பேர் ஆவர். இதில் ஆண் வாக்காளர்கள் 1,39,624, பெண் வாக்காளர்கள் 1,41,916 பேர்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள், சிற்றூராட்சி தலைவர் பதவி மற்றும் சிற்றூராட்சி உறுப்பினர் உள்ளிட்ட 65 பதவிகளுக்கான தேர்தலும் 18-9-14 அன்று நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications