தமிழகத்தில் பாஜகவின் மானம் காத்த “எல்லைச்சாமி” பொன்.ரா!
கன்னியாகுமரி: எப்பொழுதுமே கன்னியாகுமரியில் ஜெயிக்கும் கட்சிதான், மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்பது அரசியல் கட்சிகளின் ஆருடமாகவும், சென்டிமெண்டாகவும் இருந்து வருகின்றது.
இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 1 லட்சத்து 28 ஆயிரத்து 662 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாஜகவின் தமிழக "எல்லைச்சாமி" ஆக மாறியுள்ளார்.
மோடி அலை தமிழகத்திலும் வீசும் என்று கணக்குப் போட்ட தேஜ கூட்டணிக்கு கிடைத்ததென்னவோ 2 இடங்கள்தான்.அதிலும் ஒன்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் தட்டி சென்று விட்டார்.

ஆனால், "சிங்கம் சிங்கிளா வரும்" என்பது போல பாஜகவின் ஒரே ஒரு வேட்பாளராக பொன்.ரா வெற்றிக் கனியைப் பறித்துள்ளார்.
முதல் 3 சுற்றுகள் வரை காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருடன் சடுகுடு ஆடிய பொன்.ரா 4 ஆவது சுற்றில் இருந்து விறுவிறுவென்று ஆட்டத்தில் முன்னணிக்கு வந்தார்.
மாலை 4 மணிக்கு வெளியான 14 ஆவது சுற்று முடிவுகளின் படி, 3 லட்சத்து 72 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்று பாஜகவின் அடையாளத்தை தக்க வைத்தார் பொன்.ரா.
எனவே, கோட்டையை பாஜகவின் மோடி பிடித்தார் என்றால், தமிழகத்தின் எல்லையை பாஜகவின் பொன்.ரா பிடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications