ஜல்லிக்கட்டுக்காக போராட தயார்... அமைச்சராக இருப்பதால் போராடமுடியவில்லை- பொன். ராதா
ஜல்லிக்கட்டுக்காக நான் போராடத் தயார் என்றும் அதே நேரத்தில் அமைச்சராக இருப்பதால் போராட முடியவில்லை என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது
இவ்வழக்கில் தற்போது தான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கல் பண்டிகைக்குள் தீர்ப்பு வழங்க இயலாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதற்கு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும், தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று கூறி வந்தார் பொன். ராதா கிருஷ்ணன். இதே தீர்ப்பு வந்து விட்டது. இது குறித்து கருத்து கூறியுள்ள பொன். ராதாகிருஷ்ணன், நீதிமன்ற தீர்ப்பை தான் அனைவரும் நம்பிக்கொண்டு இருந்தோம். ஆனால் உச்சநீதிமன்றத்தின் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது என்றார். ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட தயாராக இருக்கிறேன். ஆனால் அமைச்சராக இருப்பதால் என்னால் போராட முடியவில்லை. நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார் பொன். ராதாகிருஷ்ணன்.
முன்னதாக இன்று காலையில் மதுரை விமான நிலையத்தில் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என்றார். அதிமுக எம்.பிக்கள் அவசர சட்டம் இயற்ற வேண்டும் இப்போது கேட்கிறார்களே? டிசம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் போது எங்கே போயிருந்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.