வாஸ்து... பச்சை நிறம்... பதவியை தக்க வைக்க யாகம்: ஆன்மீகவாதியான புதுவை நாராயணசாமி
புதுச்சேரி:அரசியல்வாதிகளுக்கு பச்சை நிறத்தின் அப்படி என்னதான் ஆவலோ, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் இப்போது வாஸ்து பார்த்து அலுவலக அறையை பச்சை நிறத்திற்கு மாற்றி விட்டாராம்.
புதுச்சேரியை ஆண்ட முன்னாள் முதல்வர் ரங்கசாமி தீவிர ஆன்மீகவாதி என்றால் அவரை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு அதிரடி ஆன்மீகவாதியாக மாறி வருகிறார் தற்போதய முதல்வர் நாராயணசாமி.
முதல்வர் பதவியை தக்கவைக்க கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்வதோடு தற்போது பரிகார பூஜைகள், யாகங்களும் செய்து வருகிறாராம்.தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு விசிட் அடிப்பதோடு வாஸ்து பார்த்துதான் கையெழுத்து போடுகிறாராம்.

புதுச்சேரி முதல்வர்
காங்கிரஸ் ஆட்சியில் மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்தவர் நாராயணசாமி. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், புதுவை முதல்வராக ஆசைப்பட்டார். ஆனாலும் நேக்காக தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்குவது போல ஒதுங்கி டெல்லியில் லாபி செய்து முதல்வராக தன்னை அறிவிக்க வைத்தார் நாராயணசாமி.

இடைத்தேர்தல் வெற்றி
தலைமையின் இந்த முடிவிற்கு அப்போதே சொந்தக் கட்சியினர் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பு கலவரமாகவே மாறியது. ஆனால் அதையும் சமாளித்து ஒரு வழியாக முதல் அமைச்சராக பதவியேற்றார். தேர்தலில் போட்டியிடாத ஒருவர், முதல் அமைச்சராக பதவியேற்றால் அடுத்த ஆறு மாதத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும் என்பது விதி.

நாராயணசாமிக்கு சிக்கல்
இந்தச் சூழலில் இவர் முதல்வராகப் பதவியேற்றதை யாரும் ரசிக்கவில்லை, என்பதால் அவருக்காக தொகுதியை விட்டுத்தர யாரும் தயாராகவில்லை என்பதால் திமுகவிடம் தொகுதியை விட்டுத்தரக்கோரி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கிரண்பேடியால் சிக்கல்
காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக முன்னாள் ஐ,பி.எஸ் அதிகாரியான கிரண்பேடியை புதுச்சேரிக்கு கவர்னராக நியமித்துள்ளது மத்திய அரசு. புதுச்சேரியின் கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்ட கிரண்பேடி தினம்தோறும் அதிகாரிகள் கூட்டம், அரசுத் துறைகள் ஆய்வு என அதிரடியாக செயல்பட்டு வருகிறார்.

எம்.எல்.ஏக்கள் மனு
பொதுமக்கள் புகார் மனுக்களோடு ஆளுநர் கிரண்பேடியை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்களது தொகுதிப் பிரச்சனையைத் தீர்க்க அவரிடமே மனு கொடுக்க ஆரம்பித்தார்கள். உச்சகட்டமாக சபாநாயகரே, தனது தொகுதியில் சாக்கடை பிரச்னையைத் தீர்க்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்.

வெற்றி பெற முடியுமா?
முதல்வர் பதவியேற்று 3 மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் 3 மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் நாராயணசாமி.

ரங்கசாமியால் சிக்கல்
முன்னாள் முதல்வர் ரங்கசாமியோ, தன்னை பார்க்க வருபவர்களிடம் எல்லாம் 'இன்னும் மூன்று மாதத்தில் மீண்டும் நான்தான் முதல்வர் என்று கூறி வருகிறாராம். கூடவே அதற்கான பூஜைகளை செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி நாராயணசாமியை கதிகலங்க வைத்திருக்கிறதாம்.

மாந்திரீக பூஜை
நாராயணசாமி தனது ஆட்சியை தக்கவைக்க முழுக்க முழுக்க மாந்திரீகத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டதாக கூறுகிறார்கள். முதல்வர் அறையில் ஏற்கெனவே ரங்கசாமியால் வைக்கப்பட்டிருந்த 'அப்பா பைத்தியம் போட்டோ' அகற்றப்பட்டு ராமானுஜர் படமும், கொல்லூர் மூகாம்பிகை படமும் வைக்கப்பட்டது.

ரங்கசாமியை விமர்சித்த நாராயணசாமி
ரங்கசாமி தனிக்கட்சி தொடங்கியபோது, " உங்கள் கட்சிக் கொடியின் நடுவில் இருக்கும் எலுமிச்சை பழத்தை எடுத்து தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பித்தமாவது தெளியும்" என்று சொன்னதோடு, மந்திரத்தால் எல்லாம் ஆட்சிக்கு வர முடியாது. மக்களுக்கு நல்லது செய்தால்தான் ஆட்சிக்கு வரமுடியும் என்று கடுமையாக விமர்சித்தவர் நாராயணசாமி.

பூஜைகள், யாகங்கள்
இப்போது நாராயணசாமியே முதல்வர் அலுவலகப் பணியைக் கூட ஒழுங்காக செய்ய முடியாத அளவிற்கு பூஜை, யாகம் என்று செய்து வருகிறாராம். முன்னால் முதல்வர் ரங்கசாமியின் யாகங்களுக்கும் பூஜைகளுக்கு எதிர் யாகங்கள் நடத்த ஆரம்பித்துவிட்டாராம்.

வாட்டி வதைக்கும் வாஸ்து
கையெழுத்துப் போடுவதில் இருந்து, காரில் ஏறுவது வரை அனைத்திலுமே வாஸ்து வாஸ்து வாஸ்துதான். அதையும் ஜோதிடர் குறித்துக் கொடுத்த நேரத்தில்தான் செய்கிறார் நாராயணசாமி என்கிறார்கள் காங்கிரஸார்.

எல்லாம் பச்சை மயம்
நாராயணசாமி முதல்வராகப் பதவியேற்றதில் இருந்து, சட்டசபையில் இருந்து வெளியேறும் வழியாகவே உள்ளே சென்று, அதே வழியிலேயே வெளியேறுகிறார். அறையில் இருக்கும் இருக்கைகள் அனைத்தும் பச்சை நிறத்தில் மாற்றப்பட்டுள்ளன. தரையில் பச்சை நிறம் கலந்த டைல்ஸ் புதியதாக பதிக்கப்பட்டிருக்கிறது.

ஆலய தரிசனங்கள்
திருவதிகை வீரட்டானேஸ்வரர், புதுக்கோட்டை புவனேஸ்வரி அதிஷ்டானம், ஆலங்குடி குருபகவான், குறிஞ்சிப்பாடி ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள், உளுந்தூர்ப்பேட்டை, திருநள்ளாரு, திருச்செந்தூர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்த்தஜாம பூஜை, என ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஆலய தரிசனங்களை செய்து வருகிறாராம்.

ஆன்மீக ஆலோசகர்
முதல்வர் நாராயணசாமிக்கு இந்த ஆன்மீக ஆலோசனைகளை அளிக்கும் அந்த ஜோதிடர் யார் என்பதுதான் இதில் ஹைலைட். அந்த மகா ஜோதிடர் வேறு யாரும் இல்லை, முன்னாள் முதல்வர் ரங்கசாமிக்கு ஆன்மீக ஆலோசகராக இருந்தவரேதான் தற்போது நாராயணசாமிக்கும் ஆலோசகராக இருக்கிறாராம்.

பதவி நிலைக்குமா?
முதல்வர் பதவி கைவிட்டு போய்விடுமோ என்ற குழப்பத்திலும் பதற்றத்திலுமே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாராம் முதல்வர் நாராயணசாமி. பதவி கிடைத்து சரியாக அனுபவிக்க முடியலையே என்பது நாராயணசாமி விசயத்தில் சரியாகத்தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications