ப.சிதம்பரத்திற்கு எதிராக கண்டன போஸ்டர்: சிவகங்கையில் பரபரப்பு
சிவகங்கை: மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக அதிமுக மாவட்ட விவசாய அணியினர் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி வாக்காளர்களை எச்சரிக்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், இலங்கையில் நமது தொப்புள் கொடி உறவுகளை, 1,85000 ஈழத்தமிழர்களை அழித்து ஒழிக்க துணைபோனா, ப.சிதம்பரமே, இலங்கையில் 10000 வீடுகள் யாருக்கு கட்டினீர்கள். சிங்கள வெறியர்களை குடியேற்றவா?
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறது. தமிழர்களே உஷார். காங்கிரசை நாட்டை விட்டே அப்புறப்படுத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் குறித்து, முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவும், மாவட்ட விவசாயபிரிவு செயலாளருமான கே.கே.உமாதேவன் கூறியதாவது:
மத்திய அமைச்சரவையில் உள்துறைஅமைச்சராகவும், நிதிஅமைச்சராகவும் இருந்த ப.சிதம்பரம், சிவகங்கை தொகுதியில் 7முறை எம்.பியாக இருந்துள்ளார். ஆனால் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த மக்களுக்கு வங்கி கிளைகளை திறந்து வைத்ததைத் தவிர குறிப்பிடும்படியாக அவர் ஒன்றும் செய்யவில்லை.
மானாமதுரை வரை வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. பல்லவன் ரயில் காலை நேரத்தில் காரைக்குடியில் இருந்து புறப்படுகிறது. அதில் பயணிகள் யாரும் போவதில்லை. தேவையான அளவு ரயில்வசதிகளைக்கூட சிதம்பரம் செய்து தரவில்லை. இந்தமுறை சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் போட்டியிட்டால் டெபாசிட் காலியாகிவிடும்
இவ்வாறு உமாதேவன் கூறினார்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.