"நாளைய முதல்வர் கார்த்தி சிதம்பரம்"!.. அதுவும் உதயநிதி தொகுதியிலேயே போஸ்டர் அடித்த கதர்கள்!
காரைக்குடி: நாளைய முதல்வர் கார்த்தி சிதம்பரம் என அவருடைய ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது.
சிவகங்கை தொகுதியின் எம்பியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவருடைய பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. தொண்டர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய கார்த்தி அந்த கூட்டத்தில் பேசினார்.

அவர் கூறுகையில் இந்தியா கூட்டணி ஒற்றுமையாகவே உள்ளது. சில மாநிலங்களில் சிக்கல் உள்ளது. அது பேச்சுவார்த்தை மூலம் சரி செய்து கொள்ளலாம். 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி கணிசமான வெற்றி பெறும். சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் மக்கள் வெவ்வேறு கண்ணோட்டத்துடன் வாக்களிப்பார்கள்.
ராஜஸ்தானில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடந்து வருகிறது. இந்த பார்முலாவை மாற்ற காங்கிரஸ் பாடுபடுகிறது. தெலுங்கானாவிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். இது நடந்தால் ஆச்சரியப்படுத்துவதில்லை, பொருளாதார ரீதியில் வளர்ச்சி என்பதுதான் எங்கள் கூட்டணியின் இலக்கு என கூறியே மக்களிடம் வாக்குகளை கேட்போம்.
தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான பிரமுகர்கள் வீட்டில் ரெய்டு நடத்தி மிரட்டுவது தேவையில்லாத விஷயம். நோட்டீஸ் அனுப்பி விசாரணை மேற்கொள்ளலாமே. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவே விரும்புகிறேன். நான் விரும்பும் பதவி அதுதான் என கார்த்தி சிதம்பரம் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கார்த்தி பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் ஏழை எளியோருக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கினர். அப்போது அந்த பகுதியில் நாளைய முதல்வர் கார்த்தி சிதம்பரம் என குறிப்பிட்டு போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். அதிலும் உதயநிதியின் தொகுதியான திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் பகுதியில்தான் இந்த போஸ்டர்கள் அதிகமான அளவில் ஒட்டப்பட்டிருந்தன.

இது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பல முறை திமுக- காங்கிரஸ் இடையே லேசான உரசல் சம்பவம் நடந்துள்ளது. இதை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேசி சரி செய்துள்ளனர். அது போல் காங்கிரஸுக்கு எதிராகவே சில நேரம் ட்வீட்டுகளை போட்டிருந்தார். காங்கிரஸ் கட்சி இக்கட்டான சூழலில் இருந்த போது அவர் பசில் கேம்களை விளையாடி அதை ட்வீட்டாக போட்டிருந்தார்.
இது காங்கிரஸ் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. ஒரு முறை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கார்த்தி சிதம்பரத்தை நேருக்கு நேர் பார்த்த போதுகூட அவர் பேசவில்லை, கார்த்தி கை கொடுத்த போதுகூட ராகுல் கண்டு கொள்ளவே இல்லை. இந்த நிலையில் கூட்டணி கட்சியான திமுக அடுத்த 5 ஆண்டுகளும் ஆட்சிக்கு வர முனைப்பு காட்டி தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் நாளைய முதல்வர் கார்த்தி சிதம்பரம் என போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications