108-ல் பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி.. துணைக்கு சென்ற மாமியார், நாத்தனார்.. விபத்தில் 3 பேரும் பலி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸில் அழைத்து சென்றுள்ளனர். அந்த ஆம்புலன்ஸில் ஜெயலட்சுமி, அவரது மாமியார், அவரது நாத்தனார் என மூவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.
கட்டுப்பாட்டை இழந்த வண்டி
ஆம்புலன்ஸை ஓட்டி வந்த டிரைவர் கலியமூர்த்தி, மருத்துவ உதவியாளர் மீனா ஆகியோரும் ஆம்புலன்ஸில் பயணம் செய்துள்ளனர். இதனிடையே கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூர் ஏரிக்கரை அருகே வந்த போது ஆம்புலன்ஸ் டயர் வெடித்ததில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
அதிவேகமாக
உடனே சாலையோரம் இருந்த மரத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஜெயலட்சுமியின் உறவினர்கள்
இதில் மருத்துவமனைக்கு செல்லும் போதே ஜெயலட்சுமியின் மாமியார் செல்வி, நாத்தனார் ஆகியோர் இறந்தனர். டிரைவர் கலியமூர்த்திக்கும் மீனாவுக்கும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை
இந்த விபத்து குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரசவத்திற்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு சென்ற போது விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.