நெருங்கும் பொங்கல்.. பானைகளை அலங்கரிக்க வந்து குவியும் மஞ்சள் குலைகள்
நெல்லை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதால் அது தொடர்பான பொருட்களின் வருகை மார்க்கெட்டுகளை மையம் கொள்ள ஆரம்பித்துள்ளன. குறிப்பாக மஞ்சள்குலைகள் குவிய தொடங்கியுள்ளன.
தமிழக மக்களின் முக்கிய பண்டிகை பொங்கல். நாளை மறுநாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் விற்பனைக்காக கரும்பு, மஞ்சள், பனங்கிழங்குகள் குவிய தொடங்கியுள்ளன. கூடவே மண்பானைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

தேனி, திண்டுக்கல் போன்ற வெளிமாவட்டங்களில இரு்ந்து கொண்டு வரப்பட்ட கரும்புகள், பாளை மார்க்கெட், சந்திப்பு, டவுன் மார்க்கெட் போன்ற பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இது போல நெல்லை சுற்று வட்டார கிராமங்களான மணிமூர்த்திஸ்வரம், அருகன்குளம், செப்பறை உள்ளிட்ட பகுதிகளில் விளைந்த மஞ்சள் குலைகளை பறித்து சுத்தம் செய்து விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.
நெல்லை மணிமூர்த்திஸ்வரம் பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் தனது தோட்டத்தில் விளைந்த மஞ்சள் குலைகளை ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்ததாக தெரிவித்தார். விவசாயிகள் இருந்து மஞ்சள் குலைகளை மொத்தமாக வாங்கி அவற்றை மார்க்கெட்டில் வியாபாரிகள் ரூ.15 முதல் அதிகபட்சமாக ரூ.30 வரை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இது போல் கரும்பும் ஒரு கரும்பு ரூ.50 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. பனங்கிழங்கு (10 எண்ணம்) ரூ.30 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் கரும்புகள் வெறும் 1 துண்டு மட்டுமே கிடைப்பதால் பலர் வெறுப்பில் உள்ளனர். குறைந்தபட்சம் ஒரு முழு கரும்பையாவது கொடுத்தால் உபயோகமாக இருக்கும் என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications