ஸ்டிரைக் எதிரொலி: தனியார் பஸ்களில் மூன்று மடங்கு கூடுதல் கட்டண வசூல்...பயணிகள் 'ஷாக்'
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
நிலுவைத் தொகை பாக்கி குறித்து அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூகம் எட்டப்படாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பரிதவிக்கும் மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து சென்னை, பெங்களூருக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இது 3 மடங்கு அதிக கட்டணமாகும்.
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.