தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்வு- இன்று முதல் அமல்!
சென்னை: தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பால் விலையை ரூ2. முதல் ரூ5 வரை உயர்த்தியுள்ளன. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு தமிழக பால் முகவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பால் கொள்முதல் விலை, மூலப் பொருள்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் காரணம் காட்டி 2015-ம் ஆண்டு தமிழகத்தில் 4 முறைக்கும் மேல் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது. உற்பத்தி அதிகரிப்பை அடுத்து, தனியார் பால் நிறுவனங்கள் விலையை சற்று குறைத்து அறிவித்தன.
இந்த நிலையில், பால் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்துவதாக தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதைக் கண்டித்து தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஹட்சன் ஆரோக்யா நிறுவனம் ரூ.2 முதல் ரூ.5 வரையில் செவ்வாய்க்கிழமை முதல் உயர்த்த உள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த நிறுவனம் பால் விலையை உயர்த்துவதால், அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு பால் விலை உயர்வை திரும்ப பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பால் விலையை நிர்ணயிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி, பொதுமக்களின் பிரதிநிதி, தனியார் பால் நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதி, பால் முகவர் சங்க நிர்வாகி ஆகியோர் கொண்ட 4 பேர் குழுவை அமைக்க வேண்டும். தனியார் பால் நிறுவனங்களை வரைமுறைப்படுத்தும் உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications